வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏற்றுமதி மேம்பாடு: வர்த்தகர்களுக்கு பியுஷ் கோயல் பாராட்டு.

Posted On: 03 JUL 2020 8:15PM by PIB Chennai

பொருளாதாரத்தில் நடப்பு நிதியாண்டில் இரு மாதங்கள் பின்னடைவு இருந்த நிலையிலும் கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் 88 சதவீதம் எட்டப்பட்டுள்ளதுஎன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில்களின் நிர்வாகக் குழுவினருடன் அமைச்சர் கோயல் இன்று (ஜூலை 3) காணொளி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்தும் அவர் உரையாடினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கோவிட்-19 காரணமாக நேர்ந்த பொருளாதார பாதிப்பிலிருந்து படிப்படியாக நாம் மீண்டு வருகிறோம். இந்நிலையில், குறுகிய காலத்தில் இதிலிருந்து மீள்வதற்காக ஏற்றுமதியாளர்கள் காட்டிய பங்களிப்பு பாராட்டத்தக்கது.

பொதுமுடக்கத்தின் இரண்டாவது கட்டத் தளர்வில் அதிக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதனால், எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரதம் (Aatamnirbhar Bharat) சுயசார்புள்ள இந்தியாவை, வலிமையான இந்தியாவை, நம்பிக்கை தரும் இந்தியாவைதுடிப்புள்ள இந்தியாவை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறது. ஒவ்வொருவரும் நம்பிக்கையும் உறுதியும் கொண்டுள்ளனர். அனைத்துத் தரப்பினரும் நல்ல ஏராளமான வாய்ப்புகள் பெறுகின்றனர். ஏழைகளாக இருப்போரும் கூட கண்ணியமாக நடத்தப்படுகின்றனர்.

தொழில்நிறுவனங்கள் இறக்குமதியைச் சார்ந்து இருக்கக் கூடாது. அதைப் போல் குறிப்பிட்ட நிலப் பகுதிகளையே சார்ந்திருக்கக் கூடாது. இவை மோசமான பின் விளைவுகளை நீண்டகாலம் ஏற்படுத்தும். எனவே, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி, உள்ளூர் ஆட்களின் திறன்களைக் கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் தரமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அது மலிவான விலையில் எளிதில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்"

இவ்வாறு அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார்.

 

 

***



(Release ID: 1636399) Visitor Counter : 160