பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொது நிர்வாகத்தில் நவீன தொழில்முறைத் திட்ட 46வது மாநாட்டை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்
Posted On:
01 JUL 2020 4:34PM by PIB Chennai
கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்கு மகத்தானது என, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
இந்தியப் பொது நிர்வாகவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த, பொது நிர்வாகத்தில் நவீன தொழில்முறை திட்ட 46-வது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றிய டாக்டர். ஜிதேந்திர சிங், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதுமே, பிரதமர் திரு.நரேந்திரமோடி ஊரடங்கை அமல்படுத்தியதால், இத்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலுவானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முறையான நடவடிக்கைகள், உலகில் மிகக் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளிலும் காணப்படுவதைப் போன்ற பேராபத்தில் சிக்குவதிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் மக்கள் தொகையும், பரப்பளவும் அதிகமாக இருப்பது, பெரும் சவாலாக இருந்த போதிலும், நாட்டின் நிர்வாகப் பொறுப்பு வகிப்போர், அதனைத் திறம்படக் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக பரிணாமம் தொடர்ந்து வந்தாலும், இரும்புத்திரை அகன்று, தற்போது குடிமைப் பணியாளர்கள், பொதுமக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த மற்றும் வெளிப்படையான ஆளுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சாமானிய மக்களின் கோரிக்கைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று தீர்த்துவைக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர்கள், அடிக்கடி மக்கள் சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில், தொடர்ச்சியாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவுகூர்ந்தார். அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் சான்றொப்பம் அளித்துவந்த நிலையை மாற்றி, சுய சான்றொப்பம் வழங்க அனுமதித்தது, கீழ்நிலைப் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு முறையை ஒழித்தது, 1500-க்கும் மேற்பட்ட தேவையற்ற விதிமுறைகள்/ சட்டங்களை ஒழித்தது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுவோர் தங்களது பணிக்காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசின் உதவிச் செயலாளர்களாக பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு, ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம், சிறப்பாகப் பணியாற்றுவோருக்கான பிரதமரின் பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுக்கான விருது முறையை மாற்றியமைத்தது உட்பட, மே 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முடிவுகளும், புரட்சிகரமானவை என்றும் அவர் குறிப்பிட்டார். தனிநபரின் பின்னணியைப் பார்க்காமல், அரசின் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவோருக்கு, சிறப்பாக பணியாற்றுவோருக்கான விருது வழங்கும் புதிய நடைமுறை, வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
(Release ID: 1635825)
Visitor Counter : 198