ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கப் பணிகளை விரைவில் நிறைவேற்றி முடிக்குமாறு அருணாச்சல பிரதேச முதலமைச்சருக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கடிதம்,
Posted On:
28 JUN 2020 1:20PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல்ஜீவன் இயக்கப் பணிகளை விரைவில் நிறைவேற்றி முடிக்குமாறு, அம்மாநில முதலமைச்சருக்கு, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு.கஜேந்திரசிங் ஷெகாவத் கடிதம் எழுதியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், 2024-ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பிரதமர் திரு.நரேந்திரமோடியின் முன்னோடித் திட்டமாக ஜல்ஜீவன் இயக்கம் கருதப்படுகிறது. கிராமப்புறங்கள் / குடியிருப்பு அளவில், அதிகாரம் பரவலாக்கப்பட்டு, தேவைக்கேற்ப, சமுதாயத்தால் நிர்வகிக்கக் கூடிய இந்த குடிநீர் விநியோகத் திட்டம், இந்தியாவின் குடிநீர் விநியோக முறையில் பெரும் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த இயக்கத்தின் மூலம், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 55லிட்டர் வீதம் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படுவதோடு, கிராமப்புற மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, நீண்டகால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், மார்ச், 2023-க்குள் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு 2020-21ஆம் ஆண்டிற்கு மத்திய அரசு ரூ..255 கோடி ஒதுக்கியுள்ளது. எத்தனை வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பன போன்ற உறுதியான செயல்பாடுகளின் அடிப்படையில், அம்மாநிலத்திற்கு கூடுதலாக செயல்பாட்டு ஊக்குவிப்பு நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 2.18லட்சம் வீடுகளில் , இதுவரை 37,000 வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டிற்குள் மேலும் 77,000 வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள், தரமான குடிநீர் இல்லாத குடியிருப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர் முன்மாதிரிக் கிராமத் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கிராமங்கள் / குடியிருப்புகளில் ஏற்கனவே உள்ள குடிநீர்க் குழாய்களை சீரமைத்து, மேம்படுத்துவதன் மூலம், எஞ்சிய வீடுகளுக்கு விரைவில் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க முடியும் என்பதால், இப்பணிகளை ஒரு இயக்கமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அம்மாநில முதலமைச்சரை, மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், குடிநீர் ஆதாரமாகத் திகழும் பொது இடங்கள் / பிற குடிநீர் ஆதாரங்கள் அருகே மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனவே, வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க ஏதுவாக, கிராமங்களில் நடைபெற்றுவரும் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் திரு.ஷெகாவத் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம், சமூக விலகலைக் கடைப்பிடிக்ககவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் வாயிலாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
அதிகாரம் பரவலாக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துதல், நிர்வகித்தல், இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை திட்டமிடுவதில், உள்ளூர் மக்கள் முக்கிய பங்கு வகிப்பதன் மூலம், கிராமங்களில் நீண்ட நாட்களுக்கு குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதி செய்யலாம். கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிபை ஊக்குவிப்பதன் வாயிலாக, அவர்கள் இப்பணிகளை முறையாக செயல்படுத்திப் பராமரிக்க முடியும். ஜல்ஜீவன் இயக்கத்தை, உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், அனைத்து கிராமங்களிலும், தகவல் அளித்தல், கற்பித்தல் மற்றும் தொடர்பு கொள்வதன் மூலம், இத்திட்டத்தில் சமுதாயப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
ப்ளம்பிங், கொத்தனார் ஃபிட்டர், பம்ப் இயக்குதல் போன்ற பணிகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பயிற்சி பெற்ற மனிதவளம் கிராமங்களில் எளிதாகக் கிடைப்பதுடன், உள்ளூர்ப் பணியாளர்களை பணியமர்த்துவதால், குடிநீர் விநியோகத்தை நீண்டகாலத்திற்கு செயல்படுத்திப் பராமரிக்க முடியும்.
குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு நீண்டகாலத்திற்கு தண்ணீர் ஆதாரம் கிடைக்கும் வகையில், தற்போதுள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள மத்திய அமைச்சர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம்(கிராமப்புறம்), மாவட்ட தாது வளர்ச்சி நிதி, வனமயமாக்கல் நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம், உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை, குடிநீர்த் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 15-வது நிதிக்குழு வாயிலாக, இம்மாநிலத்திற்கு 2020-21இல் வழங்கப்படவுள்ள ரூ.231 கோடி-யில், 50 சதவீதத்தை குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், மாவட்ட மற்றும் மாநில அளவில், தண்ணீர் தரப்பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். உள்ளூர் சமுதாயத்தை இப்பணிகளில் ஈடுபடுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நேரத்தில் கருவிகள் கொள்முதல் செய்து, அதனை சமுதாயத்திற்கு வழங்குதல், ஒவ்வொரு கிராமத்திலும் 5 பெண்களைத் தேர்வுசெய்து, கள சோதனைக் கருவிகளை இயக்குவதில் 5 பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் தண்ணீரின் தரத்தை, அந்தந்த கிராமத்திலேயே பரிசோதிக்க முடியும்.
அருணாச்சல பிரதேசத்தை ‘100 சதவீத வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு’ பெற்ற மாநிலமாக மாற்றத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அத்துடன், ஜல்ஜீவன் இயக்கத்தைத் திட்டமிட்டு, செயல்படுத்துவது குறித்து, அருணாச்சலப்பிரதேச முதலமைச்சருடன் காணொளிக் காட்சி வாயிலாக விவாதிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1635003)
Visitor Counter : 171