பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் வாழ்விட விதிமுறைகள் அறிவிக்கை அந்த மக்களுக்குப் புதிய விடியலாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கருத்து.

Posted On: 19 MAY 2020 7:12PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரை வாழ்விடமாகக் கொண்டவர்கள் என்பது குறித்த விதிமுறைகளுக்கான அறிவிக்கை அந்த மக்களுக்குப் புதிய விடியலாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று கூறினார். சமத்துவம் மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கான மரபுகளுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சீராக்கல் நடவடிக்கைகள் உள்ளன என்பதற்காக எங்களை வரலாறு நினைவில் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் தவறான நடைமுறைகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரை வாழ்விடமாகக் கொண்டவர்கள் என்பது குறித்த விதிமுறைகளுக்கான அறிவிக்கை மூலம் சரி செய்யப்பட்டுள்ளன என்று டாக்டர் .ஜிதேந்திர சிங் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் மக்கள் மூன்று தலைமுறை காலமாக நீதி மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் நிலைமை இருந்து வந்தது என்று குறிப்பிட்டார். எதிர்காலத் தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக இருக்கக் கூடிய இந்த மாற்றங்களை, தங்கள் வாழ்நாளில் காண்பது அவர்களுக்கு மனதுக்கு நெகிழ்ச்சியானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இதற்குக் காரணமாக இருப்பதற்கு தனக்கும்  தன்னுடைய பிற சகாக்கள் சிலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவில் தங்கள் பங்களிப்பு  இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் மீட்டு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல பத்தாண்டு காலமாக இருந்த பாரபட்சமான சூழ்நிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், கடந்த 70 ஆண்டு காலமாக பாரபட்சமான போக்கைக் கையாள்வதன் மூலம் அரசியல் நடத்தி வந்தவர்கள் என்ற தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய சேவைப் பணி அதிகாரிகள் 30 முதல் 35 ஆண்டு காலம் ஜம்மு காஷ்மீருக்கான சேவையில் தங்கள் வாழ்வை செலவழித்துவிட்டு, ஓய்வு பெறும் போது, மாநிலத்தை விட்டு வெளியேறும்படி விரப்படுவது முரண்பட்டதாக இருக்கிறது என்றார் டாக்டர் .ஜிதேந்திர சிங். அகில இந்திய சேவைப் பணி அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலேயே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டு, அதற்காக காலி மனையும் வழங்கப்படும் நிலையில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றுவது மிகவும் முரண்பட்டது என்று அவர் கூறினார்.

அதேபோல, அந்த அதிகாரிகளின் குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கல்வி பயின்றாலும், உயர் கல்வி நிலையங்களில் சேர அனுமதிக்கப்படுவதில்லை என்பது நியாயமற்ற செயல் என்று அவர் தெரிவித்தார்.

நமது குழந்தைகளுக்கு அதிகமான வாய்ப்புகளை அறியவும், திறனை உருவாக்கிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதைக் கருத வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவில் மிளிர்வதற்கு அவர்களுக்கு இது துணை நிற்கும் என்று அமைச்சர் கூறினார்.
 



(Release ID: 1625200) Visitor Counter : 209