பிரதமர் அலுவலகம்

போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்


போடோ ஒப்பந்தம் அஸ்ஸாமிற்குப் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்

வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைய தீவிரவாதிகளுக்கு ஆர்வத்துடன் வேண்டுகோள்

இந்தப் பகுதிக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 07 FEB 2020 5:53PM by PIB Chennai

வன்முறைப் பாதையை இன்னமும் பின்பற்றுவோர், போடோ அமைப்பினரைப் போல, தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டுமென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அழைப்பு விடுத்தார்.

     போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்.

     2020 ஜனவரி 27 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், வடகிழக்கு மாநிலத்திற்கு அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

     “வடகிழக்கு அல்லது நக்ஸல் பகுதிகள் அல்லது, ஜம்மு காஷ்மீரில் இன்னமும் ஆயுதங்கள் மற்றும் வன்முறை மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் போடோ இளைஞர்களிடமிருந்து பாடம் கற்று, உத்வேகம் பெற்று, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மீட்சி பெற்று, வாழ்க்கையைக் கொண்டாட தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

     போடோஃபா உபேந்திரநாத் பிரம்மா, ரூப்நாத் பிரம்மா போன்ற தலைவர்களின் பங்களிப்பைப் பிரதமர் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.

    

போடோ ஒப்பந்தம்-அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதன் பிரதிபலிப்பாகும்

 

     போடோ ஒப்பந்தத்தின் மிகவும் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்த அஸ்ஸாம் அரசு, போடோ பிராந்திய கவுன்சில் தலைவர் திரு. ஹக்ராமா மஹிகிலாரே, அனைத்து போடோ மாணவர் சங்கம் (ஏபிஎஸ்யு), போடோலாந் தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎஃப்பி) ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டினார்.

     “அஸ்ஸாம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிக்கு 21-ஆம் நூற்றாண்டின் புதிய தொடக்கத்தை, புதிய விடியலை, புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ள இந்த நாள் வரவேற்கத்தக்கதாகும். வளர்ச்சியும், நம்பிக்கையும் நமது முக்கிய நோக்கமாகத் தொடரவும், இவற்றை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கும் நாளாகவும் இந்நாள் உள்ளது. வன்முறை என்ற இருள், நம்மை மீண்டும் சூழாமல் இருக்க வேண்டும். அமைதியான அஸ்ஸாமை தீர்மானமான புதிய இந்தியாவை நாம் வரவேற்போம்” என்று அவர் கூறினார்.

     மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டினை இந்தியா கொண்டாடும் வேளையில் போடோ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

     “அகிம்சையின் பயன்கள் எதுவாக இருந்தாலும், அனைவரும் அவற்றை ஏற்க வேண்டும் என்று காந்திஜி அடிக்கடி கூறுவார்” என பிரதமர் தெரிவித்தார்.

போடோ ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர், இது இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்தரும் என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், போடோ பிராந்திய கவுன்சிலின் அதிகாரங்கள் மேலும் விரிவடைந்து வலுவாகும் என்று அவர் கூறினார்.

“இந்த ஒப்பந்தத்தில் அனைவரும் வெற்றியாளர்கள், அமைதிக்கு வெற்றி, மனிதகுலத்திற்கு வெற்றி” என்றார் அவர்.

போடோ பிராந்திய மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயிக்க ஆணையம் ஒன்று உருவாக்கப்படும்.

போடோ பிராந்திய மாவட்டங்களான கோக்ரஜார், சிராங், பக்சா, உடல்குரி ஆகியவை பயனடைய ரூ.1,500 கோடி திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார்.

“இது, போடோ கலாச்சாரம், மண்டலம், கல்வி ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்” என்று அவர் கூறினார்.

போடோ பிராந்திய கவுன்சில் மற்றும் அஸ்ஸாம் அரசின் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், வளர்ச்சியின் நோக்கம், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.

“இன்று போடோ பகுதியில் புதிய நம்பிக்கைகளும், புதிய கனவுகளும், புதிய உணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் அனைவரின் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இங்குள்ள அனைத்து சமூகத்தினரையும் இணைத்து, புதியதொரு வளர்ச்சி மாதிரியை போடோ பிராந்திய கவுன்சில் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது, அஸ்ஸாமை வலுப்படுத்தும். இந்தியாவின், ஒரு வலுவான இந்தியாவின் உணர்வை வலுப்படுத்தும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவை அமல்படுத்தத் தமது அரசு விரும்புவதாக கூறிய பிரதமர், குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது என்றார்.

வடகிழக்கின் விருப்பங்களை நிறைவேற்ற புதிய அணுகுமுறை

     வடகிழக்கு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைக் கையாள தமது அரசு புதிய அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்தப் பிராந்தியத்தின் விருப்பங்களையும், உணர்ச்சிமயமான பிரச்சினைகளையும், ஆழமாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இத்தகைய அணுகுமுறை சாத்தியமாகும். 

“சம்மந்தப்பட்ட அனைவருடனும் அனுதாபத்துடனும், விவாதிப்பதன் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியார்கள் அல்ல, நம்மவர்கள் என கருதப்பட்டு ஏற்பட்டுள்ள தீர்வாகும். இவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக இவர்களுடன் நாங்கள் உரையாடினோம்.  இதுவே தீவிரவாதத்தைக் குறைப்பதற்கு உதவி செய்தது. ஏற்கனவே வடகிழக்கில் தீவிரவாதம் காரணமாக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இப்போது, நிலைமை இயல்பாகவும், அமைதியாகவும் உள்ளது”.

வடகிழக்கு என்பது நாட்டின் வளர்ச்சி எந்திரமாகும்

     “கடந்த 3 – 4 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள ஒட்டுமொத்த ரயில்பாதையும், அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. வடகிழக்கில் கல்வி, திறன், விளையாட்டு ஆகியவற்றுக்குப் புதிய கல்வி நிறுவனங்களுடன் இளைஞர்களை வலுப்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. இதுதவிர, வடகிழக்கின் மாணவர்களுக்கு தில்லியிலும், பெங்களூருவிலும் புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன” என்று பிரதமர் தெரிவித்தார்.

     அடிப்படை கட்டமைப்பு என்பதன் பொருள், கற்களின் சிமெண்ட்டின் இணைப்பு மட்டுமல்ல என்று பிரதமர் கூறினார். இதில், மனித உழைப்பும் இருக்கிறது. தங்களுக்காக சிலர் அக்கறை கொள்கிறார்கள் என்ற உணர்வை இது மக்களுக்கு உருவாக்குகிறது.

     “பல பத்தாண்டுகளாக நிறைவேற்றப்படாத போகிபீல் பாலம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள், தொடர்பு வசதியைப் பெறும்போது, அரசின்மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது.  இத்தகைய வளர்ச்சி, பிரிவினையிலிருந்து இணைப்புக்கான திருப்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.  பிணைப்பு இருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சமமான வளர்ச்சி கிடைக்க தொடங்கும்போது, அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற தயாராகிறார்கள். மக்கள் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாரானால், மிகப் பெரிய பிரச்சினைகளும் கூட தீர்க்கப்படுகின்றன” என்று பிரதமர் தெரிவித்தார்.

 

******


(रिलीज़ आईडी: 1602750) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada