பிரதமர் அலுவலகம்

எழுச்சி பெறும் இமாச்சல்-உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ஐ பிரதமர் தரம்சாலாவில் தொடங்கி வைத்தார்


முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்

Posted On: 07 NOV 2019 2:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இமாச்சலப்பிரதேச முதலமைச்சரைப் பாராட்டினார்.

 

கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

 

முன்பெல்லாம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநிலங்கள் பல்வேறு தள்ளுபடிகள், சலுகைகளை அளித்து வந்தன.  எந்த மாநிலம் அதிகமாக சலுகைகளை அல்லது தள்ளுபடிகளை வழங்குகிறது என்று முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சலுகைகளையோ, தள்ளுபடிகளையோ, தொழிலதிபர்களுக்கு  வழங்கும் போட்டியால் மாநிலங்களுக்கோ, தொழிலதிபர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதை  மாநில அரசுகள்  உணர்ந்துள்ளன என்று பிரதமர் கூறினார்.

 

கட்டுப்பாடுகள் இல்லாத,  ஒவ்வொரு மட்டத்திலும் எளிதாக அனுமதி கிடைக்கக்கூடிய வகையில், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் மாநிலங்களில் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும் என்று அவர் கூறினார். 

 

தற்போது, மாநிலங்கள் இத்தகைய உகந்த சூழலை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் போட்டியிட்டு வருகின்றன. 

 

கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் நடத்துவதற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துதல், பழமையான பொருந்தாத சட்டங்களை ரத்து செய்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் இதனை நோக்கமாக்க் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.   மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற ஆரோக்கியமான  போட்டி, உலக அரங்கில் நமது தொழிற்சாலைகள் போட்டியிட வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

இது மாநிலங்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பெரும் பயனளிக்கிறது.  பெரிய அளவில் நாடு, துரித கதியில் முன்னேற்றம் அடைய இது வழிவகுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

தூய்மையான, வெளிப்படையான நடைமுறைகளை கொண்ட அரசுகளையே தொழில்நிறுவனங்கள்  விரும்புகின்றன என்று அவர் கூறினார்.

 

தேவையற்ற சட்டங்கள், அரசின் தலையீடுகள் ஆகியவை தொழில்துறையில் முன்னேற்றத்தை நிறுத்தவே வழிவகுக்கும் என்ற அவர் தெரிவித்தார்.

 

இதுபோன்ற மாற்றங்களால்தான் இந்தியா தொழில் நடத்த ஏற்ற இடமாக இன்று மாறியுள்ளது என அவர் கூறினார்.

 

புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை ஆகியவற்றுடன் இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் இன்று  வேகமாக முன்னோக்கி செல்கிறது என்று  கூறிய அவர், “சமுதாயம், புதிய இந்தியாவை ஊக்குவிக்கும் அரசு,  துணிச்சலான தொழில் துறை, பகிர்ந்து கொள்ளக்கூடிய ஞானம்”  ஆகிய நான்கு தூண்கள் இந்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றார்.

 

2014 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையே இந்தியா தொழில் நடத்த சாதகமான நாடுகள் பட்டியலில் 79 இடங்கள் முன்னேறி இருப்பதாக பிரதமர்  தெரிவித்தார்.  “ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகையில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  தரவரிசையில் முன்னேற்றம் என்பது, தொழில்துறையில் அடிமட்ட அளவில் என்ன தேவை என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டிருப்பதாக அர்த்தமாகும்” என்றார் அவர். 

 

“இது வெறும் தரவரிசையில் ஏற்பட்ட முன்னேற்றம் மட்டுமல்ல, இந்தியாவில் தொழில் நடத்துவதில் ஏற்பட்டுள்ள முக்கியமான புரட்சியாகும்.  இன்றைய உலக அரங்கில், இந்தியா வலுவாக நிற்பதற்கு, நாம் நமது பொருளாதார அடிப்படைகளைப் பலவீனமடைய அனுமதிக்காததே காரணமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

 

வலுவான திவால் சட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் முறையாக வெளியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

 

நடுத்தரப்பிரிவு மக்களின் நலனுக்காக மத்திய அரசு மிக மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது.  நாடுமுழுவதும் நிதிப் பற்றாக்குறையால் முடங்கியுள்ள வீட்டு வசதித் திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம், தங்கள் பணத்தை  முதலீடு செய்து விட்டு காத்துக் கொண்டிருக்கும் 4.58  லட்சம் குடும்பங்கள்  வீடுகளைப் பெறும் என்று அவர் கூறினார். 

 

புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை 15 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

 

தொழில் நிறுவனங்களும், உலக நாடுகளின் பிரதிநிதிகளும் முதலீடு செய்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த இடமாக இந்தியாவைப் பார்க்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

 

உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய எடுத்துள்ள முடிவால் இமாச்சலப்பிரதேசத்திற்கும் பெரும் பயன் கிட்டும் என்று பிரதமர் தெரிவித்தார். 

 

முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பல்வேறு சிறப்புமிக்க முன்முயற்சிகளை இமாச்சலப்பிரதேச அரசு எடுத்து வருவதாக அவர் பாராட்டினார்.

 

ஒற்றைச் சாளர அனுமதி முறை, துறைசார்ந்த கொள்கைகள், வெளிப்படையான நில ஒதுக்கீட்டு அணுகுமுறை ஆகியவற்றை பட்டியலிட்டு, மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்ட பிரதமர், இந்த நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்க்கும் இடமாக மாநிலத்தை மாற்றியிருப்பதாகத் தெரிவித்தார். 

 

சுற்றுலா மாநாட்டுக்கு ஏற்ற மிக அதிக அளவிலான வாய்ப்புகளை இமாச்சலப்பிரதேசம் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 

 

இமாச்சலப்பிரதேசத்தில் முதலீட்டுக்கான வளங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பறைசாற்றும் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். 

 

மாநாடு தொடர்பான மலர் ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். 

 

*********************



(Release ID: 1590903) Visitor Counter : 120