மத்திய அமைச்சரவை

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வகைசெய்கிறது.

Posted On: 31 MAY 2019 8:45PM by PIB Chennai

இந்தப் பென்சன் திட்டம் மூன்றாண்டுகளில் ஐந்து கோடி விவசாயிகளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

பிஎம்-கிசான் நிதியுதவித் திட்டத்திற்கும் கூடுதலான இந்தத் திட்டம் பொருளாதாரச் சுமையைக்  குறைப்பதோடு மாபெரும் திறனுக்கும் வழிவகுக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை புதியதொரு மத்தியத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு  அதிகாரமளிக்கும்.  நமது நாட்டிற்கு உணவளிக்க அல்லும் பகலும் பாடுபடும் விவசாயிகளுக்கு   ஓய்வூதியம் வழங்குவது அரியதொரு திட்டமாகும்.  விடுதலைக்குப் பின் முதன்முறையாக இத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது விவசாயிகளுக்குப் புதிய வாழ்வை அளிக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் முதல் மூன்றாண்டுகளில் ஐந்து கோடி சிறு குறு விவசாயிகள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் இந்தத் திட்டத்திற்கு மூன்றாண்டு காலத்திற்கு மத்திய அரசுக்கு ரூ.10774.5 கோடி செலவாகும்.

**************



(Release ID: 1573109) Visitor Counter : 151