பிரதமர் அலுவலகம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 10 MAR 2019 1:44PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் இந்திராபுரத்தில் இன்று நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கியதன் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் பார்வையிட்டார். சிறப்பாகவும், பெருமைக்குரிய வகையிலும் செயல்பட்டவர்களுக்கு பதக்கங்களையும் அவர் வழங்கினார். தியாகிகள் நினைவகத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, விருந்தினர் பதிவேட்டிலும் கையொப்பமிட்டார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடையே உரையாற்றிய பிரதமர் இந்தப் படைப்பிரிவின் பொன் விழாவை முன்னிட்டு, படையினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களை பாதுகாப்பதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கினையும் அவர் பாராட்டினார். புதிய இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள நவீன கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் இப்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். மிக முக்கிய நபர்கள் என்ற கலாச்சாரமானது பாதுகாப்பு கட்டமைப்பில் தடைகளை ஏற்படுத்துகிறது. எனவே பாதுகாப்பு படையினருடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க, இப்படைப் பிரிவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

நாட்டின் மிக முக்கியமான கட்டமைப்பைப் பாதுகாப்பதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கினை பாராட்டிய பிரதமர், பேரிடர் கால மீட்புப் பணிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் வேறு பல நடவடிக்கைகளிலும் இப்படை ஈடுபட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும், நேபாளம் மற்றும் ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் போதும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் எடுத்துக் கூறினார்.

நமது நாட்டின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் தனது அரசு உறுதியாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துவது, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயுதப் படையினருக்கு கடமையைச் செய்வது என்பதே ஒரு திருவிழாதான் என்று குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாதத்தினால் உருவாகும் சவால்களின் விளைவாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பங்கு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை  முற்றிலுமாக ஒழிப்பதில் தனது அரசு மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் வீரம், தியாகங்களுக்கு அர்ப்பணிக்கும் வகையிலேயே தேசிய காவல் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது  என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் தேசிய போர்த் தியாகிகளுக்கான நினைவகம், தேசிய காவல் வீரர்களின் நினைவகம் போன்றவை பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது படைப்பிரிவில் பெண்களை இணைத்துக் கொள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை எடுத்து வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இந்தியா வளர்ச்சி அடையும்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பொறுப்புகளும் பங்கும், அதற்கேற்ற வகையில் அதிகரிக்கவே செய்யும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

 

******



(Release ID: 1568478) Visitor Counter : 380