மத்திய அமைச்சரவை

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்

கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளில் இப்போதுள்ள விதிப்படி எஃப்எஸ்ஐ-க்கு அனுமதி
அதிக மக்கள் அடர்த்திக் கொண்ட ஊரகப் பகுதிகளை மேம்படுத்த பெரிய வாய்ப்பு
சுற்றுலாக் கட்டமைப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது
கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது
அனைத்துத் தீவுகளில் 20 மீட்டர் தூரம் வரை மேம்பாட்டு மண்டலத்திற்கு தடை
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம்
மாசுவை தடுக்க சிறப்பு கவனம்

Posted On: 28 DEC 2018 3:56PM by PIB Chennai

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு  புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தது.  கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை 2011-ல் உள்ள ஷரத்துக்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு பல்வேறு கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகத்தை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.  கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது, கடலோரப் பகுதிகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் சுற்றுலா, கடலோர மக்கள் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக கடலோர மாநிலங்கள், கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையில் உள்ள ஷரத்துக்களை ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தி வந்தன.

பயன்கள்:

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை 2018 கடலோரப் பகுதிகளில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்.  அதன்மூலம் கடலோரப் பகுதிகள் பாதுகாக்கப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியடையும்.  கடலோரப் பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதோடு, வாழ்க்கைத் தரம் உயர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது வலுசேர்க்கும்.  இந்த புதிய அறிவிக்கை கடலோரப் பகுதிகளில் புத்துணர்ச்சியை ஊட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

  1. கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையில் இப்போதுள்ள விதிமுறைப்படி எஃப்எஸ்ஐ-யை அனுமதிக்க முடிவு.  இதனால் கடலோரப் பகுதிகள் வளர்ச்சி அடைய உதவும். 
  2. மக்கள் தொகை மிகுந்த கிராமப் பகுதிகளில் மேம்பாட்டுக்கு பெரிய வாய்ப்புகள் ஏற்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மூன்று (ஊரகம்) பகுதிகள், தற்போது இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மூன்று-ஏ-படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2161 பேர் வசிக்கும் பகுதியில் உயர் கடல் அலை தொடும் பகுதியில் இருந்து 50 மீட்டருக்குள் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது. 2011 ஆம் ஆண்டு விதிப்படி 200 மீட்டர் தூரம் வரை மேம்பாடு கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 3-பி- படி, சதுர கிலோமீட்டருக்கு 2161 பேர் மக்கள் தொகை கொண்ட ஊரகப்பகுதிகளில் உயர் கடல் அலை தொடும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு மேம்பாடு நடவடிக்கைகள் கூடாது என்ற நிலை தொடரும்.
  3. கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பிடங்கள், மறைவிடங்கள், ஆடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.  மேம்பாட்டு நடவடிக்கைகள் கூடாத இடத்தில் கூட இந்த வசதிகளை ஏற்படுத்த புதிய அறிவிக்கை அனுமதி அளிக்கிறது.  இருப்பினும், உயர் கடல் அலை தொடும் பகுதியிலிருந்து இந்த வசதிகள் 10 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் குறைந்த கடல் அலை விழும்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவு உள்ள பகுதி வரை மேற்கொள்ளப்படும் திட்டங்களை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பரிசீலிக்கும்.  கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 2 மற்றும் 3 ஆகியவற்றில் வரும் திட்டங்கள் பற்றிய அனுமதிகள் உரிய வழிகாட்டுதல்களோடு மாநில அளவில் மேற்கொள்ளப்படும்.
  5. தீவுகள் பகுதிகளில்  கடலிலிருந்து 20 மீட்டர் தூரம் மேம்பாட்டு தடை மண்டலமாக இருக்கும். 
  6. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பகுதிகளுக்கும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் படி சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். 
  7. கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாசு பிரச்சினையை போக்க அதனை சுத்திகரிக்கும் வசதிகளை ஏற்படுத்த கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 1பி பகுதிகளில் உரிய பாதுகாப்புகளோடு அனுமதி அளிக்கப்படும்.
  8. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு தேவையான விதிவிலக்கு அளிக்கப்படும்.

**************

ஏடிஜி / வேணி



(Release ID: 1557669) Visitor Counter : 271