பிரதமர் அலுவலகம்

வாரணாசிக்கும் பாட்னாவிற்கும் இடையே புதிய ரயில் போக்குவரத்தையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் துவக்கி வைத்த பிரதமர் வாரணாசியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்

Posted On: 12 MAR 2018 7:34PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி வாரணாசியிலுள்ள மடுவாடி ரயில் நிலையத்திற்கும் பாட்னாவிற்கும் இடையே புதிய ரயில் போக்குவரத்தை இன்று துவக்கி வைத்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த அவர், வாரணாசியில் உள்ள டிஎல்டபிள்யூ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரை நிகழ்த்தினார்.

ஃப்ரெஞ்ச் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு அன்பான வரவேற்பை அளித்தமைக்காக அவர் காசி நகர மக்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். வாரணாசி நகரின் தொழில் வளர்ச்சியின் அறிகுறியாக விளங்கும் டிஎல்டபிள்யூவின் தொடர்ந்த வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல் குறித்து இந்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிகமான மக்கள் வீட்டு வசதியை பெறுவதை உறுதிப்படுத்த மாநில அரசு வீட்டுவசதித் துறையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறுவப்பட்டிருந்த ‘கழிவை செல்வமாக’ மாற்றுவதற்கான பல்வேறு முன்முயற்சிகள் குறித்த கண்காட்சியையும் அவர் பாராட்டினார்.

வாரணாசியில் சுற்றுலாவிற்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உடல்நலம் மிக்க இந்தியா திட்டம் (ஆயுஷ்மான் பாரத் திட்டம்) சுகாதாரத் துறையை முற்றிலுமாக மாற்றவிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அது ஏழைகளுக்கு தரம் வாய்ந்த உடல்நல வசதிகளை வழங்கவிருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களை மிகச் சிறப்பாக அமலாக்கி வரும் உத்திரப் பிரதேச மாநில அரசையும் பிரதமர் பாராட்டினார்.



(Release ID: 1524014) Visitor Counter : 129