Economy
பெண் தொழில்முனைவோருக்கான உள்ளடக்கிய சந்தை சூழலைக் கட்டமைத்தல்
Posted On:
10 APR 2026 10:58AM
இந்தியாவின் பொதுக் கொள்முதல் சந்தையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, அதன் மூலம் பெண் தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தங்களின் தயாரிப்புகளை நேரடியாக அரசுத் துறைகளுக்கு விற்பனை செய்வதற்கான அத்தியாவசிய வாய்ப்புகளை ‘வுமேனியா’ திட்டம் வழங்கி வருகிறது. அரசு கொள்முதல் சந்தையானது நாட்டின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அரசு மின்-சந்தை தளம் பொதுக் கொள்முதலை மிகவும் வெளிப்படையான, தரப்படுத்தப்பட்ட, எளிய வழிமுறையாக மாற்றியுள்ளது. இந்தச் சூழலில் குறு, சிறு நிறுவனங்களை வழிநடத்தும் பெண் தொழில்முனைவோர், கிராமப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் செயல்படும் மகளிர் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், 2019-ம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இத்திட்டம் பெண் வணிகர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 2.1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து தங்களின் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, பெண்களின் கைவினைப் பொருட்கள், பாரம்பரியத் தயாரிப்புகளுக்கு நேரடியாக, நியாயமான விலை கிடைப்பது சாத்தியமாகியுள்ளது.
அரசின் கொள்முதல் நடைமுறைகளில் பெண்களுக்கான பிரத்யேகத் தயாரிப்புப் பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் கீழ் கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், சணல் பொருட்கள், தென்னை நார் தயாரிப்புகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படுகின்றன. 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் பெண் தொழில்முனைவோர் இந்தத் தளம் மூலம், சுமார் 13.7 லட்சம் கொள்முதல் ஆர்டர்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போதைய காலகட்டம் வரை, பெண்களால் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. பெண் தொழிலதிபர்களின் வணிகத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடலோரப் பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் தொலைதூரக் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பெண்களால் வழிநடத்தப்படும் கூட்டமைப்புகள் இந்த டிஜிட்டல் தளத்தின் வாயிலாக தங்களின் பொருட்களை நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் செயல்பாட்டுத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்காகத் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் வுமேனியா திட்டம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறப் பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நிதிசார் சுதந்திரம் அடையவும் தடையற்ற வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத் தளங்களை எளிமைப்படுத்துவதன் வாயிலாகப் பெண் வணிகர்களின் கொள்முதல் சார்ந்த பரிவர்த்தனைகள், விநியோகக் கண்காணிப்பு விவரங்கள் ஆகியவை நிகழ்நேர அடிப்படையில் மிகத் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த இயற்கையான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு நிறுவனங்கள், மகளிர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு இத்தளத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்தகைய பன்முக, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள், பெண் தொழில்முனைவோரின் வணிகச் செயல்பாடுகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்ப்பதோடு, அவர்களின் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வராமலேயே தாங்களே சுயமாக விற்பனை செய்யும் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. இம்மாற்றங்கள் பெண்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இது நாடு தழுவிய சமநிலையான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, நாட்டின் நவீனப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை தூணாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158114&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159926)
आगंतुक पटल : 2
Provide suggestions / comments