• Sitemap
  • Advance Search
Rural Prosperity

இந்தியாவின் கிராமப்புறங்களில் தண்ணீர் மேலாண்மை

மக்கள் பங்களிப்புடன் கூடிய தண்ணீர் பட்ஜெட் மூலம் கிராமப்புறச் சமூகங்களை வலுப்படுத்துதல்

Posted On: 27 MAY 2026 11:36AM

இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவை, சமச்சீரற்ற விநியோகம், பருவநிலை மாறுபாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தண்ணீர் நிர்வாக முறைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தண்ணீர்த்துளியையும் துல்லியமாகக் கணக்கிடுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த தண்ணீர் பாதுகாப்பு, பருவநிலை சகிப்புத்தன்மை, நிலையான, வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். கிராமப்புற சமூகங்கள் உள்ளூர் தண்ணீர் இருப்பு, ஒட்டுமொத்த தண்ணீர் தேவையைத் தாங்களாகவே நேரடியாக மதிப்பீடு செய்வதற்குப் பங்கேற்பு சார்ந்த நீர் வரவு-செலவு கணக்கீடு பெரிதும் உதவுகிறது. இது விவசாயம், வீட்டு உபயோகம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் முறையான, விவேகமான முடிவுகளை எடுக்க கிராமப்புற மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

மத்திய அரசின் அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டம், தேசிய தண்ணீர் இயக்கம் போன்ற முன்னோடித் திட்டங்களும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகளின் சிறப்பான தண்ணீர் மேலாண்மை முயற்சிகளும் மக்கள் பங்கேற்பின் மூலம் தண்ணீர் மேலாண்மையின் வெற்றியை பறைசாற்றுகின்றன. மேலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு உள்ளூர் மட்டத்தில் தரவு சார்ந்த துல்லியமான திட்டமிடலுக்குப் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, 'வருணி' போன்ற அதிநவீன இணையதளங்கள் உள்ளூர் அளவில் துல்லியமான தண்ணீர் வரவு-செலவு கணக்கீட்டிற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பாலும் அரசின் கொள்கை ரீதியிலான ஆதரவுடனும் தண்ணீர் வரவு-செலவு கணக்கீட்டை உள்ளூர் கிராம பஞ்சாயத்து திட்டமிடலில் ஒருங்கிணைப்பது நிலையான தண்ணீர் பயன்பாட்டை நீண்ட காலத்திற்கு உறுதி செய்யும்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, மனித நல்வாழ்வின் அடிப்படை ஆதாரமாக தண்ணீர் விளங்குவதால், அனைத்துத் துறைகளின் நிலையான வளர்ச்சிக்கும் தண்ணீர் ஆதாரங்களின் இருப்பு, முறையான விநியோகம், மேலாண்மை ஆகியவை மிகவும் அத்தியாவசியமாகும். மத்திய ஜல் சக்தி அமைச்சகம், நித்தி ஆயோக் ஆகியவற்றின் ஆய்வுகளில், நிலத்தடி நீர் மேலாண்மையிலும், தண்ணீர் சேமிப்புக்கான உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும் கிராமப் பஞ்சாயத்துகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளைப் புதுப்பித்தல், நுகர்வு மேலாண்மை மூலம் கிராமப்புறங்களில் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. உள்ளூர் அளவில் தண்ணீர் நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலமும், தண்ணீர் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலமும் மட்டுமே நீடித்த தண்ணீர் பாதுகாப்பை அடைய முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158697&ModuleId=3&reg=3&lang=1

***

SS/PD

(Explainer ID: 158716) आगंतुक पटल : 34
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada