சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, தொலைதூர பகுதிகளுக்குத் தனது எல்லையை விரிவுபடுத்தி, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது
மூன்றே நாட்களில் சுமார் 200,000 பேர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2023 6:43PM by PIB Chennai
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய அரசின் மிகப்பெரிய முயற்சியான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, நாட்டின் தொலைதூர பகுதிகளுக்குச் சென்றடைவதிலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், முதன்மைத் திட்டங்களின் 100% அமலாக்கம் என்ற லட்சிய இலக்கை அடைவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
நவம்பர் 15, 2023 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த யாத்திரை, பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடர்பு (ஐ.இ.சி) வாகனங்களில் புறப்பட்டது. இந்த ஐ.இ.சி வாகனங்கள், பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும், திட்டங்களின் 100% அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக "மக்களின் பங்களிப்பு" உணர்வில் அவர்களைக் கலந்து கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அரசுத் திட்டங்களின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்வதற்குத் தொடர்ச்சியான முயற்சியுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
லடாக்கில் ஜனாஸ்கர் பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலை அடையும் ஐ.இ.சி வாகனம்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, லடாக்கில் உள்ள ஜனாஸ்கர் பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலை அடைந்து, பிரச்சாரத்தின் செய்தியை நாட்டின் தொலைதூர மூலைகளுக்குக் கொண்டு சென்றது.
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பழங்குடி மாவட்டத்தை அடைந்த வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பழங்குடி மாவட்டத்தை இந்த யாத்திரை வெற்றிகரமாக அடைந்தது, உள்ளூர் மக்களிடையே மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஐ.இ.சி வாகனம், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு காசி மலைகளை அடைகிறது
ஐ.இ.சி வாகனம், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு காசி மலைகளை அடைந்தது, இது தகவல்களைப் பரப்புவதற்கும், அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் யாத்திரையின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தியது.
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மக்கள் யாத்திரையில் இணைகிறார்கள்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் குடியிருப்பாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது, அவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தீவிரமாக உறுதியளித்துள்ளனர்.
உத்தராகண்டில் சுகாதார முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
கல்சியின் உத்பால்தா மற்றும் கங்ராவ் கிராமங்களில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை திட்டத்தின் போது சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, இதில் 109 கிராமவாசிகளுக்கு காசநோய் பரிசோதனையும், 89 கிராமவாசிகளுக்கு அரிவாள் செல் ரத்த சோகை பரிசோதனையும் செய்யப்பட்டது.
பீகாரில் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இந்த யாத்திரை அதன் ஆரம்ப கட்டத்தில், பீகாரின் கைமூர் மாவட்டத்தின் அகௌரா வட்டத்தில் அமைந்துள்ள லோஹ்ரா கிராம மக்களைச் சென்றடைந்தது. உஜ்வாலா திட்டம், பி.எம்.கிசான், சிறுதானியங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
ஒடிசா மக்களுக்கு அதிகாரமளித்தல்
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டம், சித்ரகொண்டா வட்டாரத்தில் நடந்து வரும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை, பயனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நலத்திட்டங்களின் நன்மைகளை விரிவுபடுத்துகிறது.
நவம்பர் 17, 2023 நிலவரப்படி, இந்த யாத்திரையில் சுமார் 200,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இது நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட ஆர்வமுள்ள குடிமக்களிடமிருந்து கிடைத்துள்ள பெரும் வரவேற்பைக் காட்டுகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை என்பது வெறும் மக்கள் தொடர்பு முயற்சி அல்ல; இது அரசுத் திட்டங்களின் பயன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இதன் மூலம் திட்டங்கள் 100% பயனாளிகளை சென்றடைகிறது மற்றும் நாட்டின் வளர்ச்சியில் குடிமக்களின் சுறுசுறுப்பான பங்களிப்பை ஊக்குவிக்கிறது. 2024 ஜனவரி 25-க்குள், இந்த யாத்திரை நாடு முழுவதும் 2.55 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 3600க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



***
(வெளியீட்டு அடையாள எண்: 1978287)
வருகையாளர் எண்ணிக்கை : 148