பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

சவால்களுக்கு புதிய தீர்வுகளைக் காணும் துணிச்சல் உள்ளவர்களுக்கு, அந்த சவால்களே வாய்ப்புகளாக மாறும்: பிரதமர்

இந்தியா இப்போது ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவை நோக்கிச் செயல்பட்டு வருகிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 08 AUG 2026 2:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவர்களின் மகத்தான கல்விச் சாதனைகளுக்காக வாழ்த்திய பிரதமர், அவர்களுடைய பட்டங்கள் வெறும் கல்வி வெற்றியை விட மேலானவை என்றும், அவை தேசத்திற்குப் பங்களிப்பதற்கான ஓர் கருவியாக விளங்குகின்றன என்றும் கூறினார். பதக்கம் பெற்றவர்களுக்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, இந்த நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய செயற்கை நுண்ணறிவு முயற்சிகளையும் பாராட்டினார்.

மாணவர்களின் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களின் அறிமுக நாள் தொடங்கி பட்டமளிப்பு விழா வரையிலான சூழல்களை எடுத்துரைத்தார். முதல் சம்பளம் பெறுவது, புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவது, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது என அவர்களின் மனதில் நிறைந்திருக்கும் பல்வேறு லட்சியங்களையும் அவர் பாராட்டினார்.

வரவிருக்கும் காலங்களில் பெரும் பொறுப்புகள் வரும்போது, இந்த இடத்தின் நினைவுகள் நிச்சயமாக உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  மாபெரும் உலகளாவிய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணியாக தொழில்நுட்ப முன்னேற்றத்தின் இடைவிடாத வேகத்தை சுட்டிக்காட்டினார். இந்த விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை, முன்னெப்போதும் இல்லாத சவால்கள், பரந்த புதிய வாய்ப்புகள் ஆகிய இரு அம்சங்களைக் கொண்ட ஒரு சூழலாக அவர் விவரித்தார். இந்த விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், தொடர்ந்து கற்றுக்கொள்பவரே வெற்றி பெறுவார் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஐஐடி பட்டத்தின் உண்மையான மதிப்பை எடுத்துரைத்த பிரதமர், அந்தத் தகுதி என்பது உயர் வேலைவாய்ப்பையும் தாண்டிய ஒன்று என்றும், அது உலகளாவிய சான்றிதழாகச் செயல்படுகிறது என்றும் கூறினார். கல்விசார் விடாமுயற்சிக்கும் வாழ்நாள் மீள்திறனுக்கும் இடையே ஓர் ஒப்புமையை கூறிய பிரதமர், சிக்கலான ஆய்வக உருவகங்களைத் தீர்ப்பதைப் போலவே, வாழ்க்கையின் பெரும் சவால்களையும் கையாளக்கூடிய அம்சங்களாகப் பிரித்து எதிர்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். வாழ்க்கையில் சிரமங்கள் தவிர்க்க முடியாமல் வந்தாலும், முற்றிலும் புதிய வாய்ப்புகளும் உருவாகும் எனவும் முழு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியா இப்போது ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவை நோக்கிச் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளைக் கண்டறிந்து தொழில்நுட்பத்தின் மூலம் தீர்க்கக் கூடியவற்றை தீர்ப்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். சவால்களுக்குப் புதிய தீர்வுகளைக் காணும் துணிச்சல் உள்ளவர்களுக்கு, அந்தச் சவால்களே வாய்ப்புகளாக மாறும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த தலைமுறையினர் சுமந்த வரலாற்றுச் சுமைகளை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரம் அடைதல் என்ற ஒற்றை இலக்கு, அளவற்ற தியாகமும் தவமும் நிறைந்த ஒரு முழு சகாப்தத்தையே எவ்வாறு வரையறுத்தது என்பதை நினைவு கூர்ந்தார். அடுத்த 30 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் தங்களின் தொழில் வாழ்க்கைப் பாதைகளை நேரடியாக இணைத்து, தங்களின் சொந்த மரபை வரையறுக்குமாறு தற்போதைய தலைமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார். உங்கள் ஒவ்வொரு முடிவின் அடிப்படையும், நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கும், எந்த தேசியத் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதாகவே இருக்க வேண்டும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாட்டின் இளைஞர்கள் எந்த அளவிற்கு அதிகாரம் பெறுகிறார்களோ, அந்த அளவிற்கு ஒட்டுமொத்த நாடும் அதிகாரம் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசின் உத்திசார் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார். இப்போது விண்வெளித் துறை நமது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளின் வானமாக அழகாக மாறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள விரைவான  முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இது தேசத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளிப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

ட்ரோன் துறையின் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக்காட்டிய பிரதமர், விவசாயம், மருத்துவ சேவை முதல் தேசிய பாதுகாப்பு வரையிலான துறைகளில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை விவரித்தார்.

இந்தியாவின் புத்தொழில் புரட்சிக்கு தற்போதைய தலைமுறையே உந்துசக்தியாக விளங்குகிறது என்று பாராட்டிய பிரதமர், யூனிகார்ன் நிறுவனங்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், நிதித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் உருவாகியுள்ள மாபெரும் பொருளாதார உத்வேகத்தை எடுத்துரைத்தார். இவை லட்சக்கணக்கானோருக்கு முன்னெப்போதும் இல்லாத தொழில்முனைவுத் தளங்களை வழங்கியுள்ளன என்று அவர் கூறினார்.

சமூக ஊடக யுகத்தின் நச்சுத்தன்மை வாய்ந்த கவனச்சிதறல்களுக்கு எதிராக பட்டதாரிகளை எச்சரித்த பிரதமர், தங்களது சம்பளம், வேலைவாய்ப்பு அல்லது புத்தொழில் சாதனைகளை சக பட்டதாரிகளுடன் ஒப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அவர்களை வலியுறுத்தினார். சுய முன்னேற்றத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தும் அதே வேளையில், தங்களது மன, உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296486&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2296527) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Telugu , Malayalam