பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச மாநிலம், போகபுரத்தில் ரூ.17,900 மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கடந்த 12 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர்

கடல்சார் பொருளாதாரத்தை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது : பிரதமர்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 3:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

 விமான நிலைய உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த திட்டங்கள், மாநிலத்தின் அதிவேக முன்னேற்றத்தை மிகச்சரியாகப் பிரதிபலிக்கின்றன என்று நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட நமது பழங்குடி கலாச்சாரத்தின் பெருமை, உண்மையிலேயே ஒரு அற்புதமான காட்சியாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அல்லூரி சீதாராம ராஜுவின் வீரமிக்க பாரம்பரியத்திற்கும், பழங்குடியினர் நலனுக்காக அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அர்ப்பணிப்பிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், இதே மண்ணில் புதிதாக விமான நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது வளமான எதிர்காலத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளம் என்றும் பிரதமர் விவரித்தார்.

புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரில் புதிய விமானப் போக்குவரத்து நிலையத்திற்குப் பெயரிடுவதற்கான அரசின் அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்த பிரதமர், இந்த மகத்தான அஞ்சலியானது ஆழ்ந்த தேசியக் கடமையுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த விமான நிலையம் வழியாகப் பயணிக்கும் எந்தவொரு நபரும், அல்லூரி சீதாராம ராஜுவின் பெயரிலிருந்து உத்வேகத்தை உடனடியாகப் பெறுவார்கள் என்று பிரதமர் கூறினார்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றத்தை விவரித்த பிரதமர், 2014-ல் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்ததாகவும் தற்போது 167 விமான நிலையங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். விமானப் பயணம் பெருநகரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த முந்தைய நிலையிலிருந்து மாறி, இப்போது சிறிய நகரங்களின் சாமானிய மக்களும் விமானங்களில் வசதியாகப் பயணிக்கின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். 'உடான்' திட்டம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் பறக்கும் கனவுகளை நனவாக்க எவ்வாறு வெற்றிகரமாக உதவியுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல்சார் பொருளாதாரத்தை தீவிரமாக வலுப்படுத்துவதற்கான தேசிய உத்தியை விவரித்த பிரதமர், விசாகப்பட்டினம் முதல் கிருஷ்ணபட்டினம் வரையிலான பாரம்பரிய துறைமுகங்களை நவீனமயமாக்குவதன் மூலமும், முலபேட்டா, ராமாயபட்டினத்தில் புதிய கடல்சார் மையங்களைக் கட்டுவதன் மூலமும், முழு கடலோரப் பகுதியையும் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார வழித்தடமாக மாற்றுவதற்கான தமது லட்சிய தொலைநோக்குப் பார்வையை சுட்டிக் காட்டினார். கடல்சார் பொருளாதாரத்தை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

முதலீடுகளை நேரடியாக வேலைவாய்ப்பாக மாற்றுவது என்ற அரசின் பொருளாதாரத் தத்துவத்தை விளக்கிய பிரதமர்,வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது, ​​மக்களின் வருமானம் இயல்பாகவே உயர்ந்து வாழ்க்கை கணிசமாக மேம்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது தொடங்கப்பட்ட எண்ணற்ற திட்டங்கள், செழிப்பான ஆந்திரா, வளர்ச்சி அடைந்த இந்தியா ஆகிய இரண்டு மாபெரும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதில் அடித்தளத் தூண்களாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292960&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293025) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam