PIB Backgrounder
கல்லீரல் அழற்சி (ஹெப்படைடிஸ்) பாதிப்புக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 10:45AM by PIB Chennai
இந்தியாவில் கல்லீரலைப் பாதிக்கும் கொடிய தொற்றுநோயான கல்லீரல் அழற்சி பாதிப்பை (ஹெப்படைடிஸ்) 2030-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ஒருங்கிணைந்த சுகாதார மேலாண்மை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மதுப்பழக்கம், நச்சுப் பொருட்கள், நோய் எதிர்ப்பு அமைப்பின் குறைபாடுகள், தீநுண்மித் தொற்றுகள் காரணமாகக் கல்லீரலில் ஏற்படும் வீக்கமே கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. இதில் கல்லீரல் அழற்சி பி (ஹெப்படைடிஸ்-பி), கல்லீரல் அழற்சி சி (ஹெப்படைடிஸ்-சி) ஆகிய இரண்டு வகைகளும் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டவையாகும். ஐநா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, இந்நோயைத் தடுக்கும் நோக்கில் தேசிய நச்சுயிரி கல்லீரல் அழற்சி கட்டுப்பாட்டுத் திட்டம் 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இலவசப் பரிசோதனைகளும் மருத்துவச் சிகிச்சைகளும் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 21.06 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நோய்க்கண்டறிதலுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 1,153 சிறப்புச் சிகிச்சை மையங்கள் வாயிலாக, பாதிக்கப்பட்ட 6.12 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்குக் ஹெப்படைடிஸ்-பி, ஹெப்படைடிஸ்-சி நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நோயில் ஏ, ஈ ஆகிய வகைகள் தூய்மையற்ற குடிநீர், சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் பரவுகின்றன. பி, சி, டி ஆகிய வகைகள் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவுகின்றன. உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்குள் ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஹெப்படைடிஸ்-சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12 முதல் 24 வார கால அவகாசத்தில் நச்சுயிரி எதிர்ப்பு மருந்துகள் மூலம் முழுமையான குணமளிக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய நோய் கண்காணிப்புத் திட்டம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், காசநோய் ஒழிப்புத் திட்டம் ஆகிய பல்வேறு சுகாதாரத் திட்டங்களுடன் கல்லீரல் அழற்சி கட்டுப்பாட்டுத் திட்டம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் ஹெப்படைடிஸ்-பி-க்கான கட்டாயப் பரிசோதனை செய்யப்படுவதோடு, நோய்த்தொற்று உள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசியுடன் சிறப்பு நோய் எதிர்ப்பு மருந்தும் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், ஆலோசனைகளை வழங்கவும் 1800-11-6666 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. மாவட்ட மருத்துவமனைகள் முதல் கிராமப்புறச் சுகாதார மையங்கள் வரை பரிசோதனைச் சேவைகளை விரிவுபடுத்தி, காகிதமில்லா மின்னணுத் தரவுத் தளத்தின் மூலம் நோயாளிகளின் விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289761®=48&lang=1
***
TV/PD/KR
(रिलीज़ आईडी: 2289794)
आगंतुक पटल : 12