பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நியூசிலாந்தில், தொழில் துறையினரிடையே உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
11 JUL 2026 8:16AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனுடன் இணைந்து, இன்று (11.07.2026) நியூசிலாந்தின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் குழுவினருடன் கலந்துரையாடினார்.
இந்தியாவும் நியூசிலாந்தும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை, பன்முகத்தன்மை, நிலையான வளர்ச்சிக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும், இது ஒரு லட்சியமிக்க, தொலைநோக்குடைய பொருளாதாரக் ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார உறவுகளுக்கு ஆழத்தையும் ஆற்றலையும் சேர்க்கும் ஒரு மைல்கல் என்றும், சந்தை அணுகல், முதலீடு, சேவைகள், தொழில்நுட்பம், திறமையாளர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சி, திறமையான இளம் தொழிலாளர் சக்தி, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம், டிஜிட்டல் புரட்சி, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை நியூசிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு வர்த்தகம், முதலீடு, புத்தாக்கத்திற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை, நீடித்த வளர்ச்சிப் பாதை ஆகியவை இந்தியாவை உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக நிலைநிறுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, நகர்ப்புறப் போக்குவரத்து, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுமாறு நியூசிலாந்து முதலீட்டாளர்களையும் வணிக நிறுவனங்களையும் அவர் அழைத்தார். இந்தியாவின் துடிப்பான புத்தொழில் சூழலமைப்பைப் பற்றிப் பேசிய அவர், புத்தாக்கம், நிதித் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு இடையே நெருங்கிய ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுத்தார். பால், தோட்டக்கலை, வனவியல் ஆகியவற்றில் நியூசிலாந்தின் பலமும், இந்தியாவின் நுகர்வோர் சந்தை, உணவுப் பூங்காக்கள், வேளாண் தொழில்நுட்பத் திறமை ஆகியவையும் ஒன்றிணைந்து உலகளாவிய உணவு மதிப்புச் சங்கிலிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை நியூசிலாந்து டாலர் 7 பில்லியன் (சுமார் 35,000 கோடி ரூபாய்) ஆக இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய, முதலீடு, வர்த்தகக் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த உதவுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வணிக நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். இந்தியா-நியூசிலாந்து பொருளாதார ஒத்துழைப்பானது, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வர்த்தகத்திற்கான ஒரு முன்மாதிரியாகவும், புத்தாக்கம், செழிப்புக்கான ஒரு தளமாகவும் மாறும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
****
(Release ID: 2283533)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283619)
आगंतुक पटल : 6