பிரதமர் அலுவலகம்
பல்வேறு துறைகளில் எல் நினோ ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம் நடத்திய உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
प्रविष्टि तिथि:
07 JUL 2026 8:59PM by PIB Chennai
காரீஃப் பருவத்தின் முன்னேற்றம் மற்றும் எல் நினோ தாக்கத்தால் பொருளாதாரத்தின் பிற துறைகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து, பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையில் 2026 ஜூலை 7ம் தேதி புதுதில்லியில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
வேளாண்மை, மின்சாரம், கூட்டுறவு, குடிநீர் மற்றும் சுகாதாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பொருளாதார விவகாரங்கள், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, புவி அறிவியல், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி, இந்திய வானிலை ஆய்வு மையம், தகவல் மற்றும் ஒளிபரப்பு, நுகர்வோர் விவகாரங்கள், நிதிச் சேவைகள், உரங்கள் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அமைச்சகங்களின் செயலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், ஜூன் மாதம் முதல் ஜூலை 7-ம் தேதி வரையிலான ஒட்டுமொத்த மழைப்பொழிவு நிலையை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். பருவமழை நாட்டின் எந்தெந்தப் பகுதிகளில் பரவியுள்ளது மற்றும் எல் நினோவின் சாத்தியமான தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் விளக்கமளித்தார். குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பருவமழை சுமார் 10 நாட்கள் தாமதமாகத் தொடங்கியது. இருப்பினும், 07.07.2026 வரையிலான மழைப்பொழிவின்படி, அகில இந்திய மழைப்பற்றாக்குறை -12% ஆகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் வாரம் இயல்பை விட அதிகமான பருவமழையைக் காட்டியுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மிதமான அளவில் எல் நினோ தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை காலத்தின் மொத்த மழையளவில் 30%-க்கும் அதிகமான மழை ஜூலை மாதத்தில் பதிவாவதால், இந்தச் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு எல் நினோ ஆண்டில் அந்த ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என்று கட்டாயமில்லை என்றும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
வேளாண் துறை செயலர், காரீஃப் பருவத்தில் எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து விரிவான விளக்கமளித்தார். மழைப்பொழிவு, நீர்த்தேக்க இருப்பு, பயிர் விதைப்பு, இடுபொருள் இருப்பு, சந்தை நிலவரம் மற்றும் பூச்சி அல்லது நோய் பாதிப்புகளைக் கண்காணிக்க, மாநிலங்களுடன் இணைந்து 'பயிர் வானிலை கண்காணிப்பு' குழுவின் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் உரிய நேரத்தில் முடிவெடுக்கவும், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய 262 மாவட்டங்களுக்கான 'மாவட்ட வேளாண் அவசரகால திட்டங்கள்' புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மாவட்டத்திலுள்ள விவசாய அறிவியல் மையங்களுக்காக “இந்திய வேளாண்மையில் எல் நினோ இடர்களை நிர்வகித்தல்” குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம், கடந்த காலங்களில் மழைப்பற்றாக்குறை இருந்தபோதிலும் உணவு தானிய உற்பத்தி சீராகப் பராமரிக்கப்பட்டு வருவது இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாநிலங்களில், 'பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம்' மற்றும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டங்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் அதிகப்படியான பயனாளிகளைச் சேர்க்கும் வகையில், காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்குமாறு வேளாண்மை, நிதிச் சேவைகள் மற்றும் கூட்டுறவுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் கால்நடைத் தீவனத்தின் இருப்பு நிலையை மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவில் மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தது. பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களில், நுணுக்கமான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை உறுதி செய்யுமாறு அந்தத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. நீர்வளத் துறை, நாட்டின் நிலத்தடி நீர் மற்றும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலையை பகிர்ந்துகொண்டது. தற்போதைய நிலை சீராக இருந்தாலும், பருவமழை காலம் முழுவதும் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, வெப்ப அலைகளுக்கான ஆலோசனைகளையும், வெப்ப அலைகள், அதிக ஈரப்பதம் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைத் தரைமட்டம் வரையிலான களப்பணியாளர்கள் வரை சென்றடைவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரத்துறை, சில்லறை விலை நிலவரம் மற்றும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளின் இருப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. உரத்துறை, உரங்களின் போதுமான இருப்பு மற்றும் ரபி பருவத்திற்கான தொடக்க இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உரங்களின் இருப்பை மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவில் தொடர்ந்து கண்காணிக்குமாறு இவ்விரு துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை, ஜூலை 1 முதல் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார திட்டத்தின்' கீழ் தொடங்கப்பட்ட பணிகள் குறித்து விளக்கியது. இதுவரை 1 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் விதை ரகங்களின் பரவல் குறித்துப் பகிர்ந்து கொண்டது. மின்சாரத்துறை, மின் உற்பத்தி மற்றும் மின் இருப்பு குறித்த நிலையை விளக்கியது.
பிரதமரின் முதன்மைச் செயலர், ஒட்டுமொத்தச் சூழலையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பருவமழை அல்லது தாமதமான பருவமழையினால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் அதன் தாக்கத்தை மாநிலங்களுடன் இணைந்து மதிப்பீடு செய்து, தேவைப்படும்போது உரியத் தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போதுமான தீவன இருப்பு மற்றும் தீவன மேம்பாட்டுத் திட்டங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களுடன் இணைந்து வழக்கமான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். அந்த மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்க நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு, நீர்த்தேக்க நீரை உகந்த முறையில் பயன்படுத்துவதையும், கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
அமைச்சகங்கள் அனைத்தும் மாநிலங்களுடன் இணைந்து நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றி, சிக்கல்களைத் திறம்படக் கையாள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282256®=3&lang=1
செய்தி அடையாள எண்:2282256
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2282298)
आगंतुक पटल : 13