பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நியூஸ் 18 ‘ரைசிங் இந்தியா’ உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்

प्रविष्टि तिथि: 27 FEB 2026 10:19PM by PIB Chennai

இஸ்ரேலின் காற்று இங்கும் வீசியுள்ளது.

வணக்கம்!

நியுஸ் 18 நிறுவனத்தின் அனைத்து பத்திரிகையாளர்களே, இந்த ஏற்பாடுகளைக் கவனித்து வரும் பணியாளர்களே இங்கே வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!

நீங்கள் அனைவரும் 'எழுச்சிமிகு இந்தியா'  குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில், உங்கள் முக்கியத்துவம் 'உள் ஆற்றல்'  என்பதில் உள்ளது - எளிய சொற்களில் சொல்வதானால், தேசத்தின் சொந்த உள்ளார்ந்த திறனில் உங்கள் கவனம் உள்ளது. நமது சாஸ்திரங்களில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: தத்வமஸி! - அதாவது நாம் பிரம்மத்திடம் எதைத் தேடுகிறோமோ, அது நமக்குள்ளேயே இருக்கிறது, அதுவே நாம். ஆற்றல் நமக்குள்ளேயே இருக்கிறது, அதை நாம் அங்கீகரிக்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா அந்த வலிமையை உணர்ந்துள்ளது, இன்று தேசம் அதை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

நண்பர்களே,

ஒரு தேசத்தின் வலிமை திடீரென உருவாவதில்லை; அது தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்படுகிறது. அறிவு, பாரம்பரியம், கடின உழைப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் அது செம்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் வரலாற்றின் நீண்ட காலப்பகுதியில், பல நூற்றாண்டுகால அடிமைத்தனத்தின் மூலம், வலிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள், நாம் கல்வியறிவற்றவர்கள் மற்றும் வெறும் பின்பற்றுபவர்கள் மட்டுமே என்ற நம்பிக்கையைச் சமூகத்தில் ஆழமாக விதைத்தன. நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன: யாதிருசி பாவனா யஸ்ய, சித்திர் பவதி தாத்ருசி - ஒருவருடைய நம்பிக்கை எப்படியோ, அப்படியே சாதனையும் அமையும். நம்பிக்கையே தாழ்ந்ததாக இருந்தபோது, சாதனையும் தாழ்ந்ததாகவே இருந்தது. நாம் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை நகலெடுத்தோம், வெளிநாட்டினரின் அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தோம் - இது அரசியல் ரீதியான அல்லது புவியியல் ரீதியான அடிமைத்தனம் மட்டுமல்ல, மன ரீதியான அடிமைத்தனம். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், இந்த அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து இந்தியாவால் விடுபட முடியவில்லை. அதன் விலையை நாம் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு புதிய உதாரணத்தை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்  குறித்த விவாதங்களில் காணலாம். சிலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது - இது எப்படி நடந்தது, வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளன? இதற்கான பதில் விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற நிலையிலிருந்து வெளிவந்துள்ள, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவில் உள்ளது. 2014-க்கு முந்தைய இருண்ட நிலையில் நாடு இன்னும் சிக்கியிருந்தால், பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டிருந்தால், கொள்கை முடக்கத்தில் சிக்கியிருந்தால் - யார் நம்முடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்திருப்பார்கள், யார் நம்மைத் திரும்பிப் பார்த்திருப்பார்கள்?

ஆனால் நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில், தேசத்தின் வளர்ச்சிப்பாதையில் புதிய சக்தி பாய்ந்துள்ளது. இந்தியா இப்போது தனது இழந்த வலிமையை மீட்டெடுக்கப் பாடுபடுகிறது. ஒரு காலத்தில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியபோது, நம்முடைய பலம் என்னவாக இருந்தது? இந்தியாவின் உற்பத்தி, இந்தியத் தயாரிப்புகளின் தரம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் தான் அவை. இன்றைய இந்தியாவும் மீண்டும் இந்த அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான் நாம் உற்பத்தியில் கவனம் செலுத்தினோம், ‘மேக் இன் இந்தியா’  திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தோம், நமது வங்கி முறையை வலுப்படுத்தினோம், இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினோம், இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றினோம். இந்தியாவின் இந்த வலிமையைக் கண்டுதான், வளர்ந்த நாடுகளே நம்முடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முன்வருகின்றன.

நண்பர்களே,

ஒரு தேசத்தின் மறைந்திருக்கும் சக்தி விழித்தெழும்போது, அது புதிய மைல்கற்களை எட்டுகிறது. இன்னும் சில உதாரணங்களைச் சொல்கிறேன். நான் மற்ற நாடுகளின் அரசுத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் மற்றும் மொபைல்  ஆகியவற்றின் அபரிமிதமான வெற்றியைப் பற்றிக் கேட்க அவர்கள் ஆர்வமாக உள்ளனர். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஏடிஎம்கள் மிகவும் தாமதமாக வந்த ஒரு நாட்டில், டிஜிட்டல் பரிணாமத்தில் இந்தியா எப்படி உலகளாவிய தலைமையை எட்டியது? அரசு உதவிகளில் கசிவு  என்பது கசப்பான உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டில், நேரடிப் பலன் பரிமாற்றம்  மூலம் 24 லட்சம் கோடி ரூபாயை - இருபத்தி நான்கு டிரில்லியன் ரூபாய் - பயனாளிகளுக்கு இந்தியா எவ்வாறு மாற்றியது? இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு இன்று உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நண்பர்களே,

2014 வரை சுமார் 30 மில்லியன் குடும்பங்கள் இருளில் வாழ்ந்த இந்தியா, சூரிய சக்தித் திறனில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறியது எப்படி என்று உலகம் வியக்கிறது. பொதுப் போக்குவரத்து மேம்படும் என்ற நம்பிக்கையே இல்லாத நகரங்களைக் கொண்டிருந்த இந்தியா, இன்று உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக மாறியது எப்படி? ரயில்கள் என்றாலே தாமதம் மற்றும் குறைந்த வேகம் என்று அறியப்பட்ட இந்தியா, வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் மூலம் மிதஅதிவேக (Semi-high-speed) இணைப்பை எவ்வாறு சாத்தியமாக்கியது?

நண்பர்களே,

இந்தியா புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நுகர்வோராக மட்டுமே இருந்த ஒரு காலம் இருந்தது. இன்று, இந்தியா புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குபவராகவும், புதிய தரநிலைகளை அமைப்பவராகவும் உள்ளது. நாம் நமது சொந்த வலிமையை அங்கீகரித்ததாலேயே இது நடந்துள்ளது - நீங்கள் விவாதிக்கும் இந்த 'உள் ஆற்றல்' தான் இதற்குச் சிறந்த உதாரணம்.

நண்பர்களே,

நாம் பெருமையுடன் முன்னேறும்போது, உலகம் நம்மைப் பார்க்கும் விதமும் மாறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உலகளாவிய ஊடகங்கள் இந்தியாவின் நிகழ்வுகளை எவ்வளவு குறைவாக விவாதித்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் இன்று, இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலக அளவில் எவ்வாறு பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்பதைப் பாருங்கள். இதே கட்டிடத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு  உச்சிமாநாடே இதற்கு ஒரு உதாரணம். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. ‘உலகில் முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் வளர்ந்துவரும் நாடுகளாக இருந்தாலும், அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்தனர். பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய புத்தொழில்கள்  வரை அனைத்தும் ஒன்றுகூடின.

நண்பர்களே,

இதுவரை நடந்த அனைத்துத் தொழில் புரட்சிகளிலும், இந்தியாவும் ஒட்டுமொத்த வளர்ந்துவரும் நாடுகளும் வெறும் பின்பற்றுபவர்களாகவே இருந்தன. ஆனால் இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், இந்தியா முடிவெடுப்பதில் பங்கேற்பாளராக இருப்பது மட்டுமல்லாமல், அந்த முடிவுகளை வடிவமைப்பவராகவும் உள்ளது. இன்று நமது சொந்த செயற்கை நுண்ணறிவு புத்தொழில் சூழல் அமைப்பு உள்ளது, தரவு மையங்களில்  முதலீடு செய்யும் வலிமை உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு தரவுகளைச் சேமித்துச் செயல்படுத்த மிகவும் தேவையான மின்சக்தி துறையில் நாம் அதிவேகமாகப் பணியாற்றி வருகிறோம். அணுசக்தித் துறையில் நாம் செய்துள்ள சீர்திருத்தங்கள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பை வலுப்படுத்த உதவும்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை ஒருங்கிணைத்தது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பெருமிதமான தருணம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் பழமையான கட்சி இந்த விழாவிற்குப் களங்கம் விளைவிக்க முயன்றது. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சி தனது சித்தாந்த திவால்நிலையை வெளிப்படுத்தியது. தோல்வி விரக்தியைத் தரும்போது, கர்வம் ஆட்கொள்ளும்போது, தேசத்தை அவதூறு செய்ய நினைக்கும் இத்தகைய சிந்தனை உருவாகிறது. காங்கிரஸின் செயல்கள் நாட்டிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது பாவத்தை நியாயப்படுத்த, அவர்கள் மகாத்மா காந்தியை முன்னிறுத்தினார்கள். காங்கிரஸ் எப்போதும் இதையே செய்கிறது - தனது பாவங்களை மறைக்க விரும்பும்போது பாபுவை (காந்தியை) முன்னிறுத்துகிறது; தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பும்போது, எல்லாப் புகழையும் ஒரே ஒரு குடும்பத்திற்கு அளிக்கிறது.

நண்பர்களே,

காங்கிரஸ் இப்போது சித்தாந்தம் என்ற பெயரில் எதிர்ப்பிற்கான ஒரு கருவிப் பெட்டியாக  தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது. இந்த குருட்டுத்தனமான எதிர்ப்பு மனப்பான்மை எவ்வளவு வளர்ந்துவிட்டது என்றால், ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு தளத்திலும் தேசத்தை சிறுமைப்படுத்த அவர்கள் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை. நாட்டிற்கு எந்த நல்லது நடந்தாலும், எது மங்கலகரமானதாக அமைந்தாலும், காங்கிரஸ் எதிர்ப்பை மட்டுமே அறியும்.

நண்பர்களே,

என்னிடமே ஒரு நீண்ட பட்டியல் உள்ளது - புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது, அவர்கள் அதை எதிர்த்தார்கள். நாடாளுமன்றத்தின் உச்சியில் உள்ள அசோகத் தூணின் சிங்கங்கள் - அவற்றையும் அவர்கள் எதிர்த்தார்கள். ஒரு காலத்தில் சாதாரண குடிமக்களின் காலணிகளைத் தின்ற பிறகு ஓடித் தெரிந்தவர்களின் சிங்கங்கள், நாடாளுமன்றச் சிங்கங்களின் பற்களைக் கண்டு அஞ்சின. கடமைப் பாதை  கட்டப்பட்டது, அவர்கள் அதை எதிர்த்தார்கள். ஆயுதப் படைகள் துல்லியத் தாக்குதல்களை  நடத்தின, அவர்கள் எதிர்த்தார்கள். பாலகோட் வான்வழித் தாக்குதல் நடந்தது, அவர்கள் எதிர்த்தார்கள். ‘ஆபரேஷன் சிந்துார்’ நடத்தப்பட்டது, அதையும் அவர்கள் எதிர்த்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், தேசத்தின் ஒவ்வொரு சாதனைக்கும், காங்கிரஸ் குற்றம் கண்டு பிடிக்கப்பார்க்கிறது.

நண்பர்களே,

தேசம் 370-வது சட்டப்பிரிவு எனும் சுவரைத் தகர்த்தது, நாடு மகிழ்ந்தது. ஆனால் காங்கிரஸ் அதை எதிர்த்தது. நாம் சிஏஏ  சட்டத்தைக் கொண்டு வந்தோம் - அவர்கள் எதிர்த்தார்கள். நாம் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தோம் - அவர்கள் எதிர்த்தார்கள். முத்தலாக் நடைமுறைக்கு எதிராகச் சட்டம் கொண்டு வந்தோம் - அவர்கள் எதிர்த்தார்கள். நாம் யுபிஐ  வசதியை அறிமுகப்படுத்தினோம் - அவர்கள் எதிர்த்தார்கள். தூய்மை இந்தியா  திட்டத்தைத் தொடங்கினோம் - அவர்கள் எதிர்த்தார்கள். நாடு தனக்கென சொந்தமாக கோவிட் தடுப்பூசியைத் தயாரித்தது, அதைக் கூட அவர்கள் எதிர்த்தார்கள்.

நண்பர்களே,

ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது குருட்டுத்தனமான எதிர்ப்பு என்று அர்த்தமல்ல. ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது ஒரு மாற்றுத் தொலைநோக்குப் பார்வையை முன்வைப்பதாகும். அதனால்தான் நாட்டின் அறிவுார்ந்த குடிமக்கள் காங்கிரஸுக்குப் பாடம் கற்பித்து வருகிறார்கள் - இன்று மட்டுமல்ல, கடந்த நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்து கற்பிக்கிறார்கள். நான் இப்போது சொல்லப்போவதை ஆய்வு செய்யுமாறு எனது ஊடக நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸின் வாக்குகள் திருடப்படவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்; மாறாக, நாட்டின் மக்கள் காங்கிரஸைத் தங்கள் வாக்குக்குத் தகுதியானவர்களாக இனி கருதவில்லை. இந்த வீழ்ச்சி 1984-க்குப் பிறகு தொடங்கியது. 1984-ல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும் 400-க்கும் மேற்பட்ட இடங்களையும் பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களில், காங்கிரஸின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வந்தது. இன்று காங்கிரஸின் நிலை எப்படி இருக்கிறது என்றால், காங்கிரஸுக்கு 50-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் மாநிலங்கள் வெறும் நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதே சமயம் காங்கிரஸ் படிப்படியாக மறைந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கு அடிமையானவர்களின் சங்கமாக மாறிவிட்டது. அதனால்தான் முதலில் 2000 ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்களும் காங்கிரஸிற்குப் பாடம் புகட்டினார்கள், இப்போது ஜென்-இசட்  தலைமுறையினரும் தயாராக உள்ளனர்.

நண்பர்களே,

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எவ்வளவு குறுகிய மனப்பான்மையைக் கொண்டுள்ளன என்றால், தொலைநோக்குப் பார்வையைக் கூட ஒரு குற்றமாக மாற்றிவிட்டார்கள். இன்று நாம் 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வைப் பற்றிப் பேசும்போது, சிலர் கேட்கிறார்கள்- "இவ்வளவு காலத்திற்கு முந்தைய விஷயத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?" என்று. சிலர், "அப்போது மோடி உயிரோடு இருக்க மாட்டார்" என்று கூடச் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், குறுகிய காலச் சிந்தனையால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அது ஒரு மகத்தான தொலைநோக்குப் பார்வை, பொறுமை மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நியுஸ் 18  பார்வையாளர்கள் முன் சில உண்மைகளைச் சமர்ப்பிக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டுக் கப்பல்கள் மூலம் சரக்குகளைக் கையாள்வதற்காக இந்தியா 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுகிறது. உர இறக்குமதிக்காக ஆண்டுதோறும் 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறோம். பெட்ரோலிய இறக்குமதிக்காக ஆண்டுதோறும் 11 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறோம். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான ரூபாய் நாட்டிற்கு வெளியே செல்கிறது. இந்த முதலீடு 20-25 ஆண்டுகளுக்கு முன்பே தற்சார்பை நோக்கிச் செலுத்தப்பட்டிருந்தால், இன்று இந்த மூலதனம் இந்தியாவின் உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, தொழில், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்தியிருக்கும். இன்று நமது அரசு இதே தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டுக் கப்பல்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் வழங்குவதைத் தவிர்க்க, இந்தியக் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு உர உற்பத்தியை அதிகரிக்க புதிய ஆலைகள் அமைக்கப்பட்டு, ‘நானோ யூரியா’ ஊக்குவிக்கப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்திருப்பைக் குறைக்க, எத்தனால் கலப்பு, பசுமை ஹைட்ரஜன் இயக்கம், சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நண்பர்களே,

வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் இன்று முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால்தான் இந்தியா ஒரு செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. பாதுகாப்பு உற்பத்தி, மொபைல் தயாரிப்பு, ட்ரோன் தொழில்நுட்பம், முக்கியமான கனிமங்கள் மற்றும் அவற்றில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் - வரவிருக்கும் தசாப்தங்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பிற்கு நாம் அடித்தளம் அமைத்து வருகிறோம். 2047 இலக்கு என்பது ஒரு அரசியல் முழக்கம் அல்ல. காங்கிரஸ் அரசாங்கங்கள் சரியான நேரத்தில் முதலீடு செய்யத் தவறிய வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வதற்கான ஒரு உறுதிமொழியாகும். இன்று நாம் உள்நாட்டிலேயே கப்பல்களைக் கட்டினால், சொந்தமாக ஆற்றலை உற்பத்தி செய்தால் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நாமே உருவாக்கினால், எதிர்காலத் தலைமுறையினர் இறக்குமதிச் சுமையைப் பற்றிப் பேச மாட்டார்கள், மாறாக ஏற்றுமதித் திறனைப் பற்றிப் பேசுவார்கள். ஒரு தேசத்தின் முன்னேற்றம் "இன்றைய வசதியால்" தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக "நாளைய தயாரிப்பால்" தீர்மானிக்கப்படுகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் செய்யப்படும் கடின உழைப்புதான் 2047-ல் தற்சார்பு கொண்ட, வலிமையான மற்றும் வளமான இந்தியாவிற்கு அடித்தளமாகும். காங்கிரஸ் தனது எதிர்ப்பின் அடையாளமாக எத்தனை ஆடைகளைக் கிழித்துக் கொண்டாலும், நாங்கள் சளைக்காமல் உழைப்போம்.

நண்பர்களே,

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கியமான நிபந்தனை, நோக்கத்தின் நேர்மையாகும். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இங்கேயும் கூடத் தோற்றுப்போய்விட்டன. அவர்கள் ஒருபோதும் நேர்மையுடன் செயல்பட்டதில்லை. ஏழைகளின் துயரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உதாரணமாக, வங்காளத்தில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு நேர்மை இருந்திருந்தால், ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசச் சிகிச்சை அளிக்கும் ஒரு திட்டத்தை அவர்கள் தடுத்திருப்பார்களா? மாட்டார்கள். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள். நியுஸ் 18  பார்வையாளர்களுக்கு மற்றுமொரு புள்ளிவிவரத்தைத் தருகிறேன். தமிழ்நாட்டில், ஏழைக் குடும்பங்களுக்காகச் சுமார் 9.5 லட்சம் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன - ஆம், 9.5 லட்சம் வீடுகள். ஆனால் இந்த வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. ஏன்? ஏனெனில் தி.மு.க அரசாங்கம் ஏழைகளுக்கான இந்த வீடுகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கான காரணம் தெளிவானது - அவர்களின் நோக்கம் நேர்மையானது அல்ல.

நண்பர்களே,

விவசாயத் துறையிலிருந்தும் ஒரு உதாரணத்தைத் தருகிறேன். காங்கிரஸ் காலத்தில், விவசாயம் அதன் போக்கிலேயே விடப்பட்டது. சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர், பயிர் காப்பீடு சீர்குலைந்தது, குறைந்தபட்ச ஆதரவு விலை  குறித்த சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கை கோப்புகளில் புதைக்கப்பட்டது. காங்கிரஸ் பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டது, ஆனால் களத்தில் எதுவும் நடக்கவில்லை - ஏனெனில் அவர்களிடம் நேர்மை இல்லை. நாம் நாட்டின் விவசாயிகளுக்காக நேர்மையுடன் உழைக்கத் தொடங்கினோம், இன்று உலகம் அதன் முடிவுகளைக் கண்டு வருகிறது. இன்று, இந்தியா உலகின் முக்கிய விவசாய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது. நாம் ஒவ்வொரு மட்டத்திலும் விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்கியுள்ளோம். பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி மூலம் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நாம் குறைந்தபட்ச ஆதரவு விலையை  உற்பத்திச் செலவை விட 1.5 மடங்காக நிர்ணயித்து, சாதனை அளவிலான கொள்முதல் செய்தோம். பருப்பு வகைகளுக்கான ஒரு புள்ளிவிவரத்தை மட்டும் சொல்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம், 10 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் வெறும் 6 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை மட்டுமே கொள்முதல் செய்தது. ஆனால் நமது அரசு இதுவரை சுமார் 170 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை அதிகபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்துள்ளது - இது கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம். இப்போது விவசாயிகளுக்காக உண்மையிலேயே உழைப்பவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நண்பர்களே,

விவசாயிகளுக்கான கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு உதவி வழங்குவதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு மிகவும் கஞ்சத்தனமாகவே இருந்தது. அதன் 10 ஆண்டு காலத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 7 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை வழங்கியது. ஆனால் நமது அரசோ, அதைவிட நான்கு மடங்கு அதிகமாக - அதாவது 28 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில், இதனால் வெறும் 5 கோடி விவசாயிகள் மட்டுமே பயனடைந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, கிட்டத்தட்ட 12 கோடி விவசாயிகளை எட்டியுள்ளது. அதாவது, முதல் முறையாக சிறு விவசாயிகளுக்கும் உதவி கிடைத்துள்ளது. நமது அரசு விவசாயிகளுக்கு ‘பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம்’  எனும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்கியுள்ளது. இதன் கீழ், நெருக்கடியான காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்கனவே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாம் நேர்மையுடன் பணியாற்றி வருவதால், இந்தியா விவசாயிகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது, அவர்களின் உற்பத்தித்திறன் பெருகி வருகிறது, மேலும் அவர்களின் வருமானமும் வளர்ந்து வருகிறது.

நண்பர்களே,

21-ஆம் நூற்றாண்டின் கால் பகுதி ஏற்கனவே கடந்துவிட்டது. அடுத்த கட்டம் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு தீர்க்கமான காலமாகும். இன்று எடுக்கப்படும் முடிவுகள்தான் எதிர்காலத்தின் திசையைத் தீர்மானிக்கும். நமது வலிமையை அங்கீகரித்து மேம்படுத்துவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் தங்கள் துறையில் சிறந்து விளங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு நிறுவனமும் மேன்மையை  தனது கலாச்சாரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் வெறும் தயாரிப்புகளை மட்டும் உற்பத்தி செய்யக்கூடாது, சிறந்த தரமான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். நாம் வழக்கமான பணிகளை மட்டும் செய்யாமல், உலகத்தரம் வாய்ந்த பணிகளைச் செய்ய வேண்டும். நாம் நமது திறமையைச் செயல்பாடாக மாற்ற வேண்டும். நான் செங்கோட்டையிலிருந்து சொன்னது போல – இதுவே தருணம், ஆகச் சிறந்த தருணம். இந்தியாவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கான நேரம் இது. மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

***

(Release ID: 2233802)

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2277637) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam