பிரதமர் அலுவலகம்
இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:32PM by PIB Chennai
ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
1993-ல் ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இது ஒரு வரலாற்று மைல்கல் என்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவில் ஒரு புதிய பாதையையும் வகுக்கிறது. 1993-ல் தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் நம்பிக்கை, சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பாரம்பரிய நட்புறவையும் பன்முக ஒத்துழைப்பையும் வளர்த்துள்ளன.
இந்தப் பயணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தியக் பிரதமரும் ஸ்லோவாக் பிரதமரும், இந்தியாவுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான உறவை ஒரு விரிவான உத்திசார் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இது தற்போதுள்ள ஒத்துழைப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதையும், இருதரப்பு, பலதரப்பு அளவில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப முக்கியத்துவத்தை உணர்ந்து, இரு தலைவர்களும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, பிராந்திய இணைப்பு, சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம், சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் இந்தியாவுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான ஒரு வலுவான ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டனர்.
வழக்கமான உயர்நிலைப் பரிமாற்றங்கள், நீடித்த அரசியல் உரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியதோடு, அனைத்து நிலைகளிலும் தூதுக்குழுக்களின் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
ஐநா சபையை மையமாகக் கொண்ட பன்முகத்தன்மைக்கும், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கும் தலைவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். அதேவேளையில், ஐநா சபை, குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பன்முக நிறுவனங்களை மேலும் பிரதிநிதித்துவமுள்ளதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், திறம்பட்டதாகவும், புவிசார் அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதாகவும் மாற்றுவதற்கான விரிவான சீர்திருத்தங்களின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியதன் அவசரத் தேவையையும் தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஸ்லோவாக்கியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை இந்தியா வரவேற்றது.
இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத் தூண்களில் ஒன்றாக, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, தத்தமது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே வழக்கமான ஆலோசனைகளையும் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பேரிடர் குறைப்பு கட்டமைப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
இரு தலைவர்களும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் திட்டவட்டமாகக் கண்டித்ததோடு, 2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலையும் வன்மையாகக் கண்டித்தனர். பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம், முதலீட்டிற்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று குறிப்பிட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பிற்கான அதிக ஆற்றல் வாய்ந்த துறைகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதில், இந்தியா-ஸ்லோவாக்கியா கூட்டுப் பொருளாதாரக் குழுவின் பங்கை மேலும் வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பசுமை எரிசக்தி மாற்றத்திற்கான தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கும், தூய்மையான, நம்பகமான, எரிசக்தி அமைப்புகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
வானிலை, நீரியல் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகள் துறையில், தத்தமது விண்வெளிச் சூழல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
சுகாதாரத் துறையில், குறிப்பாக மருந்து ஆராய்ச்சி, மேம்பாடு, டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகள், சுகாதாரத்திற்கான மனித வளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் வழக்கமான உரையாடலைப் பேணுவதும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதும் அவசியம் என்பதைத் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
திறமையான தொழில் வல்லுநர்களின் ஒழுங்கான, பாதுகாப்பான, சட்டப்பூர்வமான இடப்பெயர்ச்சிக்குத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமக்கும் தமது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்லாவாக்கிய பிரதமர் திரு ஃபிகோவிற்கும் ஸ்லோவாக்கிய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். உயர் நிலைப் பரிமாற்றங்களின் வேகத்தைத் தொடர இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273091®=3&lang=1
(Release ID : 2273091)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273310)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam