PIB Backgrounder
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் பயணம்

प्रविष्टि तिथि: 15 JUN 2026 4:15PM by PIB Chennai

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. நாட்டின் கடைக்கோடி மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில், அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர வீடு, தூய்மையான சமையல் எரிவாயு, சுத்தமான குடிநீர், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மின்சார வசதி, குறைந்த கட்டணத்தில் எல்இடி விளக்குகள், போக்குவரத்து இணைப்பு ஆகியவை லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும், வசதிகளையும் தந்துள்ளன. சாலைகள், ரயில், மெட்ரோ ரயில், பிராந்திய விமானப் போக்குவரத்து எனப் பன்முக உட்கட்டமைப்பு மேம்பாடுகள் பயணக் களைப்பைக் குறைத்து, பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தியுள்ளன. ஜன் தன், முத்ரா போன்ற திட்டங்கள் மூலம் நிதி உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டு, விளிம்புநிலை மக்களுக்கும் எளிதாக வங்கிக் கடனுதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் சீர்திருத்தங்கள், மை கவ் போன்ற மக்கள் பங்கேற்புத் தளங்கள் மூலம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளன. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் ஒட்டுமொத்த தேசத்திலும் அமைதி, கண்ணியம், புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

அடிப்படை வசதிகள்: வீட்டுவசதி, குடிநீர், தடையில்லா மின்சாரம்:

மக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதில் பாதுகாப்பான நிரந்தர வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. 2015-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1.25 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, 98 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2024-ல் தொடங்கப்பட்ட நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0 மூலம் தகுதியான பயனாளிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வீட்டின் உரிமையாளராகவோ அல்லது கூட்டு உரிமையாளராகவோ பெண்கள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 3.98 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.05 கோடி வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 சதவீதம் வீடுகள் பெண்கள் பெயரில் அல்லது கூட்டு உரிமையுடன் உள்ளன. அனைத்து வீடுகளும் கழிப்பறை, குடிநீர், மின்சார இணைப்பு ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளன. நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அம்ருத் திட்டம் 4,800 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2.79 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புறப் பெண்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மே 2016-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ், இதுவரை 10.57 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் எரிவாயு இணைப்பு பரவல் 107.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019-ல் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஊரகப் பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு 81.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 12 கோடி புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதன் மூலம், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுமையான குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன.

நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் கடந்த 12 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து 532 ஜிகா வாட்டைக் கடந்துள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 274.69 ஜிகாவாட்டாக உயர்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. சௌபாக்யா திட்டம் மூலம் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் சூரியசக்தி மேற்கூரை திட்டம் மூலம் 40 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் மேற்கூரைகளில் சூரியசக்தி பேனல்கள் நிறுவப்பட்டு, மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. உஜாலா திட்டத்தின்கீழ் 37 கோடி எல்இடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நிதி உள்ளடக்கம், நவீனப் போக்குவரத்து வசதிகள்:

ஜன் தன் திட்டத்தின்கீழ் 58 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, 3 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. சிறு தொழில்முனைவோருக்கான முத்ரா திட்டத்தின்கீழ் 40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 57.7 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 66 சதவீதப் பயனாளிகள் பெண்கள் ஆவர்.

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 61 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. ரயில்வே துறையில் மின்மயமாக்கல் 99.6 சதவீதத்தை எட்டியுள்ளதுடன், பட்ஜெட் ஒதுக்கீடு 2.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டில் இயக்கப்பட்டு வரும் 162 வந்தே பாரத் ரயில்களில் இதுவரை 9.1 கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதுடன், 1.64 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் கட்டமைப்பு 26 நகரங்களில் 1,155 கிலோமீட்டராக விரிவடைந்து உலகளவில் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியாவை வளர்ச்சியடையச் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த நடவடிக்கைகள், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வலிமையான அடித்தளத்தை அமைத்துள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273017&reg=3&lang=1

***

SS/PD/SH

 


(रिलीज़ आईडी: 2273164) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam