மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவில் தமது வளாகத்தை அமைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றது
प्रविष्टि तिथि:
04 JUN 2026 8:11PM by PIB Chennai
தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ் உயர் கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, கர்நாடகாவின் பெங்களூருவில் கிளை வளாகத்தை அமைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்கு கல்வி அமைச்சகம் இன்று வழங்கியது.
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் யவெட் கூப்பர் ஆகியோர் முன்னிலையில், கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவருமான டாக்டர் வினீத் ஜோஷி, லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் (பெங்களூரு) பேராசிரியர் ரிச்சர்ட் க்ரோஸிடம் இந்த ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி, இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதர் திருமிகு லிண்டி கேமரூன் உள்ளிட்ட இந்தியா, பிரிட்டனைச் சேர்ந்த உயர்மட்டப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் 'இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல், இயக்குதல் தொடர்பான விதிமுறைகள், 2023'-ன் கீழ், கடந்த 2025-ம் ஆண்டு மே 26 அன்று புதுதில்லியில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்கு விருப்பக் கடிதம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில், இப்பல்கலைக்கழகம் தேவையான கல்விசார் உள்கட்டமைப்பு, ஒழுங்குமுறை சார்ந்த ஏற்பாடுகளை நிறைவேற்றியது. பல்கலைக்கழகத்தின் தயார்நிலை, விதிமுறைகளுக்கு உட்படுதல் ஆகியவை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் தமது செயல்பாடுகளைத் தொடங்க தற்போது ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269054®=3&lang=1
***
SS/IR/LDN/RJ
(रिलीज़ आईडी: 2272212)
आगंतुक पटल : 42