பிரதமர் அலுவலகம்
முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியை அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 9:23PM by PIB Chennai
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்ற அவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றார். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் இரட்டிப்பு பலனை நமக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இம்முறை சர்வதேச யோகா தினத்தின் முதன்மை நிகழ்வு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பண்டைய இந்திய பாரம்பரியத்தை மனிதகுலத்தின் நல்வாழ்வுடன் இணைக்கும் நோக்கில், சர்வதேச யோகா தினத்தை அறிவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தியா முன்மொழிந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், ஐ.நா. சபையில் உள்ள 190 நாடுகள் இந்தியாவின் இந்த முன்மொழிவை ஆதரித்ததைச் சுட்டிக்காட்டினார். தற்போது லட்சக்கணக்கான மக்கள் யோகா, தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றைத் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். இந்த சாம்பியன் போட்டியின் மூலம் யோகாசனம் ஒரு போட்டி விளையாட்டாக புதிய அங்கீகாரத்தைப் பெறும் என்றும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனம் நிச்சயம் சேர்க்கப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கையை தெரிவித்தார். இந்த முதல் சாம்பியன் போட்டி, யோகாசனத்தை சர்வதேச விளையாட்டுகளுக்கு இணையாகக் கொண்டு செல்ல வழிவகுக்கும்.
யோகாசனம் ஒரு விளையாட்டாக விரிவடையும் போது, அது விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி மேலாளர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான "ஆரோக்கியமான முதுமை காலத்திற்காக யோகா" என்பதைக் குறிப்பிட்ட அவர், நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ விரும்புவோருக்கு யோகா மிகச் சிறந்த தேர்வாகும் என்றார். "தினமும் யோகா செய்யுங்கள், அது அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும்" என்ற பொது சுகாதார மந்திரத்தை உலக மக்கள் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார். ஆயுஷ் அமைச்சகத்தின் 'யோகா 365' பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது யோகாவின் உலகளாவிய தூதர்களாகச் செயல்பட்டு உலகை இணைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269096®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269115)
आगंतुक पटल : 13