PIB Backgrounder
பிரதமரின் நெதர்லாந்து பயணம்: எரிசக்தி, தொழில்நுட்பம், உத்திசார் ஒத்துழைப்பில் புதிய மைல்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2026 5:28PM by PIB Chennai
இந்தியா, நெதர்லாந்து நாடுகள் 1947-ஆம் ஆண்டு முதல் வலுவான தூதரக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த பல தசாப்தங்களாக வர்த்தகம், முதலீடு, நீர் மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்த ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. மாறிவரும் இன்றைய உலகச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
நெதர்லாந்தின் அதிநவீன தொழில்நுட்பத் திறனும், இந்தியாவின் பிரம்மாண்டமான சந்தையும் இணைந்து இக்கூட்டாண்மையை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் இணையும் ஒரு சிறந்த தளமாக மாற்றியுள்ளன. இந்த இருதரப்பு ஒத்துழைப்பானது செமிகண்டக்டர்கள், பசுமை ஹைட்ரஜன், கடல்சார் தொழில்நுட்பம், திறனுள்ள தொழிலாளர்களின் தடையற்ற இடப்பெயர்வு ஆகிய துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய உத்திசார், புவிசார்ந்த அரசியல் சூழலில், நெதர்லாந்து இந்தியாவை வெறும் ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், ஒரு வல்லரசாகக் கருதுகிறது.
வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை பொறுத்தவரை, ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் நட்பு நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும். கடந்த 2024-25 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 27.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் மொத்தம் 55.6 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டுடன் முதலீடு செய்துள்ள நான்காவது பெரிய நாடாக நெதர்லாந்து விளங்குகிறது. இந்தியாவின் மொத்த வணிகப் பொருட்களின் வர்த்தகத்தில் நெதர்லாந்தின் பங்கு 2.46 சதவீதமாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு 17.393 பில்லியன் டாலர் வர்த்தக உபரி கிடைத்துள்ளது. தற்போது இரு நாடுகளிலும் தலா 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
செமிகண்டக்டர் துறையில், திறன் மேம்பாடு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல், தூய்மையான எரிசக்தித் துறையில் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், பசுமைத் துறைமுகங்களை மேம்படுத்துவதும் இக்கூட்டணியின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
ஐரோப்பாவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்தில்தான் அதிகளவிலான இந்தியப் வம்சாவளியினர் வாழ்கின்றனர். அங்குள்ள சுமார் 2,40,000 இந்தியப் புலம்பெயர்ந்தோரின் வசதிக்காக இரு நாடுகளும் இடப்பெயர்வு மற்றும் நடமாட்டத்தை எளிதாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இத்தகைய சூழலில், 2026 மே மாதத்தில் இந்தியப் பிரதமர் நெதர்லாந்திற்கு மேற்கொண்ட பயணம் இந்த விரிவான உறவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. இப்பயணத்தின் போது, இரு நாடுகளின் வளர்ந்து வரும் உத்திசார் ஒற்றுமையை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா - நெதர்லாந்து உறவை 2026-2030 காலகட்டத்திற்கான ஒரு உத்திசார் கூட்டாண்மை என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்த இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263796®=3&lang=1
***
SS/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264232)
வருகையாளர் எண்ணிக்கை : 10