பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு: ஆளில்லா விமான ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது டிஆர்டிஓ
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 9:50PM by PIB Chennai
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் , ஆளில்லா விமானம் மூலம் ஏவப்படும் துல்லியமான வழிகாட்டுதல் ஏவுகணையின் இறுதி வடிவ சோதனைகளை ஆந்திராவின் கர்னூல் சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அதிநவீன தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்பட்ட இந்த ஏவுகணை, தரை மற்றும் வான் இலக்குகளைத் தாக்கும் இரு வடிவங்களிலும் சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை உருவாக்க பாரத் டைனமிக்ஸ் மற்றும் அதானி பாதுகாப்பு நிறுவனங்களுடன் டிஆர்டிஓ இணைந்துள்ளது. இமாரத் ஆராய்ச்சி மையம் முதன்மையாகச் செயல்பட்டு, பிற டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் ஏராளமான உள்நாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைகளின் பங்களிப்போடு இந்த ஏவுகணை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உடனடித் தொடர் உற்பத்திக்குத் தேவையான உள்நாட்டு விநியோகச் சங்கிலி வலுவடைந்துள்ளது. டேங்குகளை அழிக்கும் தரை இலக்கு வடிவம் மற்றும் ட்ரோன், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் வான் இலக்கு வடிவ சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இதனைப் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதற்கான முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிஆர்டிஓ தலைவர் திரு. சமீர் வி காமத் இச்சாதனைக்காகப் படைக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
***
(Release ID 2263045)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263251)
வருகையாளர் எண்ணிக்கை : 13