பிரதமர் அலுவலகம்
நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2026 9:48PM by PIB Chennai
இன்று நான் ஒரு மிக முக்கியமான விசயத்தைப் பற்றி பேச வந்திருக்கிறேன், குறிப்பாக நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம்! மகளிர் சக்தியின் எழுச்சி எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்களின் கனவுகள் ஈவுஇரக்கமின்றி நசுக்கப்பட்டுள்ளன. எங்களது பெரும் முயற்சிகளையும் மீறி, எங்களால் வெற்றி பெற முடியவில்லை, மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை! இதற்காக அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
நமக்கு தேசிய நலனே மேலானது, ஆனால் சிலருக்கு கட்சி நலனே எல்லாவற்றையும் விட மேலானதாக மாறும்போது, கட்சி நலன் தேசிய நலனை விட பெரிதாகும்போது, அதன் பாதக விளைவுகளை மகளிர் சக்தியும் தேசிய நலனும் அனுபவிக்க வேண்டியுள்ளது. இந்த முறையும் அதுதான் நடந்துள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் நாட்டின் மகளிர் சக்திக்கு தீங்கு விளைவித்துள்ளது.
நண்பர்களே,
நேற்று, நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் பார்வை நாடாளுமன்றத்தின் மீது இருந்தன, தேசத்தின் மகளிர் சக்தி கவனித்துக்கொண்டிருந்தது. பெண்களுக்கு ஆதரவான இந்த முன்மொழிவு தோல்வியடைந்தபோது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் மகிழ்ச்சியில் கைதட்டியதைக் கண்டு நானும் மிகுந்த வேதனையடைந்தேன். பெண்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, அவர்கள் மேசைகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்தது வெறும் மேசைகளைத் தட்டியது மட்டுமல்ல, அது பெண்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தின் மீது விழுந்த பேரிடியாகும். பெண்கள் எதையும் மறந்துவிடுவார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எனவே, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய நடத்தையினால் ஏற்பட்ட வலி பெண்களின் இதயங்களில் எப்போதும் நிலைத்திருக்கும். நாட்டின் பெண்கள் இந்தத் தலைவர்களைத் தங்களது பகுதிகளில் எப்போது பார்த்தாலும், பெண்களுக்கான இடஒதுக்கீடு தடுக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் கொண்டாடியவர்கள் இவர்கள்தான் என்பதை அவர்கள் நினைவு கூர்வார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட திருத்தத்தை எதிர்த்த கட்சிகளுக்கு நான் தெளிவாகச் சொல்கிறேன்: இவர்கள் மகளிர் சக்தியை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். 21-ம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் இவர்களின் நோக்கங்களை உணர்ந்து உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்ததற்காக எதிர்க்க செய்த பாவம் அவர்களுக்கு நிச்சயமாகத் தண்டனையைப் பெற்றுத்தரும். இந்தக் கட்சிகள் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகளையும் அவமதித்துள்ளன, மக்களிடமிருந்து கிடைக்கும் தண்டனையிலிருந்தும் அவர்களால் தப்பிக்க முடியாது.
நண்பர்களே,
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் என்பது யாரிடமிருந்தும் எதையும் பறிப்பதைப் பற்றியது அல்ல. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் என்பது அனைவருக்கும் எதையாவது வழங்குவதைப் பற்றியது, அது கொடுப்பதற்கான ஒரு திருத்தம். இது 2029 மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள உரிமையை வழங்குவதைப் பற்றியது.
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் என்பது 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் பெண்களின் பாதையில் உள்ள தடைகளை அகற்றி, புதிய வாய்ப்புகளையும், புதிய வேகத்தையும் வழங்குவதற்கான ஒரு பெரும் முயற்சியாகும். நாட்டின் 50 சதவீத மக்கள்தொகைக்கு உரிமைகளை வழங்குவதற்காகத் தெளிவான நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்ட ஒரு புனிதமான முயற்சி இது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களை உடன் பயணிகளாக்குவதற்கும், அனைவரையும் உள்ளடக்குவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சியாகும். மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் என்பது காலத்தின் தேவை. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் என்பது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என ஒவ்வொரு மாநிலத்தின் வலிமையையும் சமமாக அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் குரலுக்கும் கூடுதல் வலிமை அளிப்பதற்கான முயற்சியாகும். மாநிலம் சிறியதோ அல்லது பெரியதோ, மக்கள் தொகை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும், அனைவரின் வலிமையையும் சம விகிதத்தில் அதிகரிப்பதற்கான முயற்சியாகும். ஆனால் இந்த நேர்மையான முயற்சி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக - இந்தக் கட்சிகளே இந்தக் கருவை அழித்த குற்றவாளிகள். அவர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான குற்றவாளிகள், அவர்கள் நாட்டின் பெண் சக்திக்கு எதிரான குற்றவாளிகள்.
நண்பர்களே,
மகளிர் இடஒதுக்கீடு என்றாலே காங்கிரஸுக்கு வெறுப்பு, மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுக்க அது எப்போதும் சதி செய்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்தத் திசையில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, காங்கிரஸ் அவற்றைத் தடுத்தது. இந்த முறையும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுக்கப் பொய்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கின. சில நேரங்களில் எண்களைப் பற்றி, சில நேரங்களில் வேறு வழிகளில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாட்டைத் திசைதிருப்ப முயன்றன. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தக் கட்சிகள் இந்தியாவின் மகளிர் சக்திக்கு முன்னால் தங்களது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் தங்களது முகமூடியைக் கழற்றிவிட்டனர்.
நண்பர்களே,
தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் தனது பல தசாப்த காலத் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நான் நம்பினேன். காங்கிரஸ் தனது பாவங்களுக்காக வருந்தும் என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதற்கும், வரலாறு படைப்பதற்கும் கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் ஏற்கனவே தனது இருப்பை இழந்துவிட்டது. காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணியைப் போலப் மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் பிராந்தியக் கட்சிகள் கூட வலுவடைவதை விரும்புவதில்லை, எனவே பல பிராந்தியக் கட்சிகளின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ள காங்கிரஸ் அரசியல் சதி செய்து, அவர்களை இந்தத் திருத்தத்தை எதிர்க்க வைத்தது.
நண்பர்களே,
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும் அதே சாக்குப்போக்குகளையும், அதே தவறான வாதங்களையும் உருவாக்கி, எப்போதும் ஏதோ ஒரு தொழில்நுட்பச் சிக்கலை உள்ளே நுழைத்துப் பெண்களின் உரிமைகளைச் சூறையாடி வருகின்றன. அரசியலின் இந்த அசிங்கமான பாணியை நாடு புரிந்து கொண்டுள்ளது, அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் அது புரிந்து கொண்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒரு பெரிய காரணம் இந்தக் குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளின் பயமாகும். பெண்கள் அதிகாரம் பெற்றால் தங்களது குடும்ப அரசியல் தலைமை ஆபத்தில் சிக்கிவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். தங்களது குடும்பத்தைத் தவிர வேறு பெண்கள் முன்னேறுவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இன்று பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். அவர்கள் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு முன்னேறிச் செல்ல விரும்பும்போது, அவர்கள் நாட்டிற்குச் சேவை செய்ய விரும்பும்போது, இந்தக் குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் பாதுகாப்பற்ற உணர்வைப் பெறுகின்றன. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, பெண்களுக்கு இன்னும் பல இடங்கள் கிடைக்கும், பெண்களின் அந்தஸ்து உயரும், அதனால்தான் இவர்கள் மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்தை எதிர்த்தனர். இந்தப் பாவத்திற்காக நாட்டின் மகளிர் சக்தி காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஒருபோதும் மன்னிக்காது.
எனது அன்புக்குரிய நாட்டு மக்களே,
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தொடர்ந்து பொய்களைக் கூறி வருகின்றன. இந்தப் போர்வையில் பிரிவினைத் தீயை மூட்ட அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் ‘பிரித்தாளும் அரசியல்’ என்பது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து காங்கிரஸுக்குக் கிடைத்த வாரிசு சொத்து. காங்கிரஸ் இன்றும் அதே பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் பிளவுகளை உருவாக்கும் உணர்வுகளை காங்கிரஸ் எப்போதும் தூண்டிவிட்டுள்ளது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு சில மாநிலங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற பொய் பரப்பப்பட்டது! எந்தவொரு மாநிலத்தின் பங்களிப்பு விகிதமும் மாறாது, யாருடைய பிரதிநிதித்துவமும் குறைக்கப்படாது என்று அரசாங்கம் முதல் நாளிலிருந்தே தெளிவாகக் கூறியுள்ளது. உண்மையில், அனைத்து மாநிலங்களின் இடங்களும் சம விகிதத்தில் அதிகரிக்கும். இருப்பினும் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இதை ஏற்கத் தயாராக இல்லை.
நண்பர்களே,
இந்தத் சட்டத் திருத்த மசோதா அனைத்துக் கட்சிகளுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழ்நாடு, வங்காளம், உத்தரப்பிரதேசம், கேரளம் என ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும். ஆனால் தங்களது சுயநல அரசியலால், இந்தக் கட்சிகள் தங்களது சொந்த மாநில மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டன. உதாரணமாக, அதிகப்படியான தமிழ் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆக்கி, தமிழ்நாட்டின் குரலை வலுப்படுத்த திமுகவுக்கு வாய்ப்பு இருந்தது! ஆனால் அந்த வாய்ப்பை அது இழந்துவிட்டது. வங்காள மக்களை முன்னேற்ற திரிணாமுல் காங்கிரஸுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸும் அந்த வாய்ப்பை இழந்தது. சமாஜ்வாதி கட்சிக்குத் தனது பெண் எதிர்ப்பு பிம்பத்தின் கறையைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால் சமாஜ்வாதி கட்சியும் அதைத் தவறவிட்டது. சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே லோகியா ஜியை மறந்துவிட்டது. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம், லோகியா ஜியின் அனைத்துக் கனவுகளையும் சமாஜ்வாதி கட்சி காலடியில் போட்டு நசுக்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சி மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது, இதை உத்தரப்பிரதேச மற்றும் நாட்டின் பெண்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
நண்பர்களே,
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஒரு விசயத்தை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் ஒரு சீர்திருத்த எதிர்ப்பு கட்சி. 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குத் தேவையான முடிவுகள் எதுவாக இருந்தாலும், தேவையான சீர்திருத்தங்கள் எதுவாக இருந்தாலும், நாடு எடுக்கும் முடிவுகள் எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் அவற்றை எதிர்க்கிறது, நிராகரிக்கிறது, தடுக்கிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு மற்றும் இதுதான் காங்கிரஸின் எதிர்மறை அரசியல்.
நண்பர்களே,
ஜன் தன்–ஆதார்–மொபைல் ஆகிய முப்பெரும் திட்டத்தை எதிர்த்த அதே காங்கிரஸ்தான் இது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை காங்கிரஸ் எதிர்த்தது. ஜிஎஸ்டியை காங்கிரஸ் எதிர்த்தது. பொதுப் பிரிவில் ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிர்த்தது. முத்தலாக் எதிர்ப்புச் சட்டத்தைக் காங்கிரஸ் எதிர்த்தது. 370-வது சட்டப்பிரிவை நீக்குவதைக் காங்கிரஸ் எதிர்த்தது. பொது சிவில் சட்டம் (UCC) அவசியம் என்று நமது அரசியலமைப்பும், நமது நீதிமன்றங்களும் கூறியுள்ளன, ஆனால் அதையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. சீர்திருத்தம் என்று சொன்னாலே, காங்கிரஸ் போராட்டப் பதாகைகளுடன் ஓடுகிறது. நாட்டை வலுப்படுத்தும் எந்தப் பணியாக இருந்தாலும், அதில் முட்டுக்கட்டை போடுவதில் காங்கிரஸ் தனது முழு பலத்தையும் செலுத்துகிறது. "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையை காங்கிரஸ் எதிர்க்கிறது. நாட்டிற்குள் ஊடுருவியவர்களை வெளியேற்றுவதைக் காங்கிரஸ் எதிர்க்கிறது. வாக்காளர் பட்டியலைத் திருத்தவும் காங்கிரஸ் எதிர்க்கிறது. வக்ஃப் வாரியச் சீர்திருத்தங்களைக் காங்கிரஸ் எதிர்க்கிறது.
நண்பர்களே,
அகதிகளுக்குப் பாதுகாப்பு அளித்த சிஏஏ (CAA) சட்டத்தைக் கூட காங்கிரஸ் எதிர்த்தது. பொய்களைக் கூறி வதந்திகளைப் பரப்பி நாட்டில் ஒரு புயலை உருவாக்கியது. மாவோயிஸ்ட்-நக்சலைட் வன்முறையை ஒழிப்பதற்கான நாட்டின் முயற்சிகளைக் காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரஸுக்கு ஒரே ஒரு பாணிதான் உள்ளது: ஒரு சீர்திருத்தம் வரும்போதெல்லாம் பொய் சொல்லுதல், குழப்பத்தைப் பரப்புதல். வரலாறு அதற்குச் சாட்சி, காங்கிரஸ் எப்போதும் இந்த எதிர்மறைப் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளது.
நண்பர்களே,
நாட்டிற்கு அவசியமான எந்த முடிவாக இருந்தாலும், காங்கிரஸ் அதை மூடி மறைத்துவிடுகிறது. காங்கிரஸின் இந்த மனப்பான்மையால் இந்தியா பெற வேண்டிய வளர்ச்சியின் உச்சத்தை அடையவில்லை. சுதந்திரத்தின் போது, நம்முடன் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அந்த நாடுகளில் பெரும்பாலானவை நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன, அதற்குக் காரணம் காங்கிரஸ் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் தடுத்துக் கொண்டே இருந்ததுதான். தாமதப்படுத்துதல், திசைதிருப்புதல், தடுத்தல் - இதுவே காங்கிரஸின் கொள்கை, இதுவே காங்கிரஸின் கலாச்சாரம். அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சினைகளைத் தீர்ப்பதை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. பாகிஸ்தானுடனான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளைக் காங்கிரஸ் தாமதப்படுத்தியது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு முடிவை 40 ஆண்டுகளாகக் காங்கிரஸ் தாமதப்படுத்தியது. ராணுவ வீரர்களுக்கான ‘ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தைக் காங்கிரஸ் 40 ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியது.
நண்பர்களே,
காங்கிரஸின் இந்த மனப்பான்மை எப்போதும் நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் ஒவ்வொரு எதிர்ப்பு, ஒவ்வொரு முடிவின்மை, ஒவ்வொரு ஏமாற்றுத்தனத்தாலும் தேசம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று நாட்டிற்கு முன்னால் உள்ள அனைத்துப் பெரிய சவால்களும் காங்கிரஸின் இந்த மனப்பான்மையிலிருந்து உருவானவைதான். எனவே, இந்தப் போராட்டம் வெறும் ஒரு சட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது காங்கிரஸின் சீர்திருத்த எதிர்ப்பு மனப்பான்மைக்கு எதிரான போராட்டம், இது எதிர்மறையால் மட்டுமே நிறைந்துள்ளது. காங்கிரஸின் இந்த மனப்பான்மைக்கு நாட்டின் பெண்களும் மகள்களும் தகுந்த பதில் அளிப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
நண்பர்களே,
நாட்டின் பெண்களின் கனவுகள் உடைந்ததைச் சிலர் அரசாங்கத்தின் தோல்வி என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த விசயம் ஒருபோதும் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றியதோ அல்லது பெருமை தேடிக்கொள்வதைப் பற்றியதோ அல்ல. நான் நாடாளுமன்றத்திலும் சொல்லியிருந்தேன்: பாதி மக்கள் தொகைக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கட்டும், அதற்கான பெருமையை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் வெளியிட்டு அவர்களுக்கு அளிக்கிறேன் என்று. ஆனால் காலாவதியான சிந்தனையுடன் பெண்களைப் பார்ப்பவர்கள் இப்போதும் தங்களது பொய்களிலேயே உறுதியாக இருக்கிறார்கள்!
நண்பர்களே,
மகளிர் சக்திக்கு அதிகாரப் பங்களிப்பு அளிப்பதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக நானும் அதற்காக முயற்சி செய்து வருபவர்களில் ஒருவன். எத்தனையோ பெண்கள் இந்த விஷயத்தை என்னிடம் எழுப்பியுள்ளனர். எத்தனையோ சகோதரிகள் எனக்குக் கடிதம் எழுதி அனைத்தையும் விளக்கியுள்ளனர். எனது நாட்டின் தாய்மார்களே, சகோதரிகளே, மகள்களே - நீங்கள் அனைவரும் இன்று வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். இன்று மசோதாவை நிறைவேற்றத் தேவையான 66 சதவீத வாக்குகளை நாம் பெறவில்லை என்றாலும், நாட்டின் 100 சதவீத மகளிர் சக்தியின் ஆசி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் உறுதியளிக்கிறேன்: மகளிர் இடஒதுக்கீடு என்ற பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் நாம் அகற்றுவோம். நமது துணிச்சல் அதிகம், நமது உறுதி தகர்க்க முடியாதது, நமது சபதம் அசைக்க முடியாதது. மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளால் இந்த நாட்டின் மகளிர் சக்தி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் தங்களது பங்களிப்பை அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. இது காலத்தின் கட்டாயம் மட்டுமே. பெண் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கான பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதிப்பாடு அப்படியே உள்ளது. நேற்று நம்மிடம் போதிய பலம் இல்லை, ஆனால் அதற்காக நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. நமது உள்ளார்ந்த வலிமை வெல்ல முடியாதது. நமது முயற்சி நிற்காது, நமது முயற்சி ஓயாது. இனி வரும் காலங்களில் நமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பாதி மக்கள்தொகையினைக் கொண்ட மகளிர் சக்தியின் கனவுகளுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக, நாம் இந்த உறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
AD
***
(வெளியீட்டு அடையாள எண்: 2253466)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada