குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரை

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2026 1:51PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.

இமாச்சலப் பிரதேசத்தை தேவ் பூமி மற்றும் வீர் பூமி என்று பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், நாட்டின் ஆயுதப் படைகளுக்கு இம்மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்றார். வளமான விருந்தோம்பல், துடிப்பான கலாச்சாரம் மற்றும் நீடித்த பாரம்பரியம் ஆகியவற்றிற்காக அவர் மாநிலத்தைப் பாராட்டினார்.

இந்தியாவின் வளமான கல்வி பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், நாலந்தா பல்கலைக்கழகம், தக்ஷஷிலா போன்ற மாபெரும் பண்டைய கற்றல் மையங்கள் அவற்றின் ஆசிரியர்களின் ஞானம், அறிவாற்றல் மற்றும் நிலையான அறிவுசார் பரிணாம வளர்ச்சியின் காரணமாக செழித்து வளர்ந்தன என்றார். இந்த நிறுவனங்களின் குருக்கள் மற்றும் ஆச்சார்யர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றவர்களாக இருந்தனர், அவர்கள் விவாதம், உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மூலம் தங்கள் அறிவை செம்மைப்படுத்தி, கருத்துக்கள் செழித்து, நாகரிகங்கள் முன்னேறும் சூழலை உருவாக்கினர். அதே உணர்வில், நவீன பல்கலைக்கழகங்கள் ஆசிரிய மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கற்பித்தல், இடைநிலை ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பில் புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகம் தேசிய கல்விக் கொள்கை 2020- ஆர்வத்துடன் செயல்படுத்தி வருவதாகவும், இந்திய அறிவு பாரம்பரியம் தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் புதிய கண்ணோட்டத்துடன் புதிய கல்வி கலாச்சாரத்தை வளர்ப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார். பல படைப்புகளை டோக்ரியில் மொழிபெயர்க்கவும், இந்தி இலக்கியத்தை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கவும் பல்கலைக்கழகத்தின் முன்முயற்சியை பாராட்டிய அவர், 'சுதேசி சிந்தன்' மற்றும் இந்திய ஆராய்ச்சி முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவின் அறிவுசார் மரபுகள் மீதான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். கூட்டு ஆராய்ச்சி, பகிரப்பட்ட ஆசிரிய நிபுணத்துவம், டிஜிட்டல் வளங்கள் மற்றும் கல்வி பரிமாற்றங்கள் மூலம் இத்தகைய கூட்டாண்மை, மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு ஒரே மாதிரியாக பயனளிக்கும் ஒரு பெரிய கற்றல் சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், உலகளாவிய போட்டித்திறன் கொண்ட உயர்கல்வி சூழலை உருவாக்குவதற்கு பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற முன்முயற்சிகள் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இளைஞர்களிடையே புதுமைகளை ஊக்குவித்ததற்காகவும், அதன் "சமூக ஆய்வக" முன்முயற்சிக்காகவும் பல்கலைக்கழகத்தை அவர் பாராட்டினார். இதன் மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் அருகிலுள்ள சமூகங்களுடன் ஈடுபடுகிறார்கள், அணுகுமுறையை வலுப்படுத்துகிறார்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவின் யதார்த்தங்களை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகிறார்கள் என்றார் அவர்.

வளர்ந்த பாரதம்  2047 தொலைநோக்குப் பார்வையைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், சுதந்திரத்தின் நூற்றாண்டு காலத்திற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நெறிமுறைத் தலைமை தேவைப்படும் என்றார். இந்தக் கண்ணோட்டத்தை நனவாக்குவதில் மாணவர்களும் இளைஞர்களும் மிக முக்கியமான பங்குதாரர்களில் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

நமது மாநிலங்கள் அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்காத வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் இல்லாத வளாகத்தை உருவாக்குவதற்கான பல்கலைக்கழகத்தின் முன்முயற்சிகளைப் பாராட்டிய அவர், போதைப்பொருள் இளைஞர்கள், சமூகம் மற்றும் தேசத்தை மோசமாக பாதிக்கிறது என்றும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு  எதிராக அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைவரையும் வலியுறுத்தினார். சமூகத்தின் நலனுக்காக தங்கள் அறிவைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் நலனுக்காக வாழ்வதற்கும், எப்போதும் "போதைப்பொருட்களுக்கு வேண்டாம்" என்று சொல்வதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தேசத்தை முதலில் 'ராஷ்டிர பிரதம்' என்று வைத்திருப்பதற்கும் இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இன்றைய பட்டமளிப்பு விழாவில், 700-க்கும் மேற்பட்ட திறமையான மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை பெண்கள் என்று அவர் குறிப்பிட்டார். 32 தங்கப் பதக்கங்களை வென்றவர்களில், 23 பேர் இளம் பெண்கள் என்று கூறிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பும் அதிகாரமும் அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது என்றார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் கவிந்தர் குப்தா, வேளாண் அமைச்சர் சந்தர் குமார், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீவ் பரத்வாஜ் மற்றும் அனுராக் சிங் தாக்கூர், வேந்தர் ஹர்மோஹிந்தர் சிங் பேடி மற்றும் துணைவேந்தர் சாத் பிரகாஷ் பன்சால் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2240105)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240170) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam