பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 8:05PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் இந்த விழா ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இந்தியா வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். "நிறுத்தவோ, இடைநிறுத்தவோ இந்தியாவிற்கு நேரமில்லை என்று நான் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து கூறினேன். 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இந்தியா தனது வேகத்தை விரைவுபடுத்தியுள்ளது," என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் புத்தொழில் நிறுவன புரட்சிக்கு உத்வேகம் அளித்த வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு, தேசிய புத்தொழில் நிறுவன தினம் மற்றும் இந்தியாவின் வலிமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க காரணியாக இருந்த இந்திய எரிசக்தி உச்சிமாநாடு போன்ற சமீபத்திய மைல்கற்களை திரு மோடி மேற்கோள் காட்டினார்.
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்தில் புதிய உத்வேகத்தை செலுத்தியுள்ளது என்றும், இது இந்தியாவிற்கு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க வாரமாக அமைகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திறன்களைக் காண ஒன்றுகூடினர் என்றும், நாட்டின் உத்திசார் தொலைநோக்குப் பார்வையை வெகுவாகப் பாராட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு முடிவடைந்த உடனேயே, இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலியலை வலுப்படுத்தும் இந்த மகத்தான திட்டத்துடன் நாடு இன்று முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். "நவீன உலகத்தை இயக்கத் தேவையான செயலாக்க சக்தியை வழங்குவதில் உலகின் முன்னணி நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா இப்போது பாடுபடுகிறது. மேலும் மென்பொருள் மற்றும் வன்பொருள் அம்சங்களில் ஒரே நேரத்தில் செயல்படுகிறது" என்று திரு மோடி தெரிவித்தார்.
தற்போதைய தசாப்தத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை இந்தியாவின் தொழில்நுட்ப காலம் என்று வலியுறுத்திய பிரதமர், பசுமை எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதலீடு செய்வது 21-ஆம் நூற்றாண்டின் திறனுக்கான அடித்தளமாக அமையும் என்று கூறினார். மனிதகுலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இந்தியா இன்று இதுவரை இல்லாத வகையில் முதலீடுகளைச் செய்து வருவதாகவும், இந்தியாவில் இந்த வலுவான செமிகண்டக்டர் சூழலியலின் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் மேலும் கூறினார்.
"இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட" சிப்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் 6ஜி முதல் பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்கள் வரை முக்கியமான துறைகளுக்கு ஆற்றல் அளிக்கின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்க, செமிகண்டக்டர் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் முழுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆதரவுக்காக அரிய வகை கனிம வழித்தடங்களை நிறுவுதல் உள்ளிட்ட பட்ஜெட் அறிவிப்புகளின் முன்னேற்றங்களுடன், 85,000 நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிப் முதல் புத்தொழில் நிறுவனம் வரையிலான முன்முயற்சியை அவர் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2231345)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231560)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam