புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை உற்பத்திக் குறியீடு மற்றும் நுகர்வோர் விலை நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படை திருத்தம் குறித்த மூன்றாவது முன்-வெளியீட்டு ஆலோசனைப் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2026 7:45PM by PIB Chennai
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) ஆகியவற்றின் அடிப்படைத் திருத்தம் குறித்த வெளியீட்டுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கின் மூன்றாவது பதிப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இந்த தொடர் பயிலரங்கங்கள், முன்னதாக மும்பையிலும், தில்லியிலும் நடைபெற்றது.
பயிலரங்கின் தொடக்க அமர்வில், மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் தலைவரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் சி. ரங்கராஜன், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவ லட்சுமணன் கரண்டிகர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷமிகா ரவி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள், நிதி நிறுவனங்களின் நிபுணர்கள், கல்வியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சௌரப் கார்க், பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு, தரவு சார்ந்த முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாற்று தரவு ஆதாரங்களைப் பயன்படுத்துதல், தரவுத்தொகுப்புகளை ஒத்திசைத்தல் மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அணுகல் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துதல் முதலியவற்றில் அமைச்சகம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
பயிலரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய டாக்டர் ஷமிகா ரவி, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பு மாற்றத்திற்கு, பொருளாதார நடவடிக்கைகளின் உண்மையான அளவைப் பெறுவதற்கு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த தரவு பயனர்கள் மற்றும் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதன் அவசியத்தை தலைமை விருந்தினர் டாக்டர் சி. ரங்கராஜன் எடுத்துரைத்தார். இந்தியாவின் பொருளாதார மாற்றத்தைக் கண்காணிக்க துல்லியமான, சரியான நேரத்தில் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்களை பிரதிபலிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரில் திருத்தங்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220999&v=3®=3&lang=1
(Release ID: 2220999)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221091)
வருகையாளர் எண்ணிக்கை : 77