கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்திய வாகனத்துறை உலக அளவில் தலைமை வகிக்க இலக்கு: மத்திய அமைச்சர் திரு ஹெச்.டி. குமாரசாமி
இடுகை இடப்பட்ட நாள்:
27 JAN 2026 6:37PM by PIB Chennai
புனேயில் நடைபெற்ற சர்வதேச வாகனத் தொழில்நுட்பக் கருத்தரங்கை மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு ஹெச்.டி. குமாரசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் வைர விழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்பான மற்றும் நவீனப் போக்குவரத்துத் தீர்வுகளை நோக்கி இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியப் பொருளாதாரம் தற்போது 4.18 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், 2030-க்குள் 7.3 டிரில்லியன் டாலராக வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படி, 2070-க்குள் சுற்றுச்சூழல் மாசற்ற நாடாக மாறும் இலக்கை அடைய மின்சார வாகனப் புரட்சி அவசியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.
அரசின் கொள்கைகள் குறித்துப் பேசிய அவர், FAME-II திட்டத்தின் மூலம் 16.71 லட்சம் மின்சார வாகனங்கள் மற்றும் 9,000 சார்ஜிங் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் பிரதமரின் மின்சார வாகனங்கள் மற்றும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் உள்நாட்டு பேட்டரி உற்பத்தி மற்றும் வாகனத் தயாரிப்புக்கு ரூ.36,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வணிக வாகனங்கள் ஏற்படுத்தும் மாசுபாட்டைக் குறைக்க, 70,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்க ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி 3.1 கோடியாக உயர்ந்துள்ளது, உலகளாவிய வாகனத் துறையில் இந்தியாவின் வலிமையை உறுதிப்படுத்துவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219263®=3&lang=1
***
TV/VK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2219384)
வருகையாளர் எண்ணிக்கை : 37