தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாகர்கோவிலில் புதிய மருத்துவமனை அமைக்க தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2025 5:09PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகத்தின் 197-வது கூட்டத்தில், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, தமிழ்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 100 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைப்பதற்காக 3.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2025-26 மற்றும் 2026-27 நிதியாண்டுகளுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், செயல்திறன் பட்ஜெட் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயனாளிகளுக்குப் பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான புதிய கொள்கை ஆகியவற்றிற்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 14.91 கோடிப் பயனாளிகளைக் கொண்ட இக்கழகம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் 31.03.2027 வரை பயனர் கட்டண விலக்கை  நீட்டிக்கவும் முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202402&reg=3&lang=1

***

SS/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2203191) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada