குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது அனைவரது பகிரப்பட்ட கடமை: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2025 2:13PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 10, 2025) புதுதில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மனித உரிமைகள் சமமான சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்குகின்றன என்பதை நமக்கு நினைவூட்டுவதாகக் கூறினார். மனித உரிமைகளுக்கான உலகளாவிய கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என அவர் தெரிவித்தார். கடைசி நிலையில் உள்ளவர் உட்பட அனைவருக்கும் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நமது அரசியலமைப்பின் தொலைநோக்குப் பார்வையில் மனித உரிமைகள் அடங்கியுள்ளன என்று அவர் கூறினார். 

தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையங்கள், நீதித்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டு நமது அரசியலமைப்பின் உரிமைகளை நிலைநாட்டும் காவலாளிகளாகச் செயல்படுவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம், எஸ்சி பிரிவினர், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்கள், பெண்கள், குழந்தைகள் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளைத் தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருவதை அவர் குறிப்பிட்டார்.

 

பெண்களுக்கு அதிகாரமளித்தலும் அவர்களின் நலனும் மனித உரிமைகளின் முக்கிய தூண்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பொது இடங்களிலும் பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த மாநாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்ததற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு, உரிமையை நிலைநாட்டுதல் என்ற நிலையில் இருந்து அதிகாரமளித்தல் என்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் என்பது அரசும், மனித உரிமை ஆணையமும் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல எனவும், நமது சக மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒரு பொதுவான கடமை என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201388&reg=3&lang=1

(Release ID: 2201388)

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2201959) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam