இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
புது தில்லியில் எம்.பி.க்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டார்
Posted On:
07 SEP 2025 4:43PM by PIB Chennai
பெருமையுடன் சுதேசி என்ற சிறப்பு கருப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் பேரணி முயற்சியின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் இன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா சைக்கிள் பேரணி நடத்தினார். இந்தியா கேட் மற்றும் கடமைப் பாதையைச் சுற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிதிவண்டியில் அவர் பயணித்தார்.
ஃபிட் இந்தியா ஞாயிறு சைக்கிள் பேரணியின் 39-வது பதிப்பு, இந்திய ரயில்வேயுடன் இணைந்து நாடு முழுவதும் 8000 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. புதுதில்லியில், இந்த நிகழ்வை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் காலை 7 மணிக்கு மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1500-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்போம் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய விளையாட்டு உடைகள் மற்றும் உடற்பயிற்சி பிராண்டுகள் பங்கேற்பாளர்களுக்காக சுதேசி பொருட்களுடன் தங்கள் ஸ்டால்களை அமைத்திருந்தன.
இந்த நிகழ்வில் வேளாண்மைத் துறை இணையமைச்சர் பகீரத் சவுத்ரி, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் நவீன் ஜிண்டால், புருஷோத்தம் ரூபாலா, பிரபுபாய் வாசவா, ஹேமங் ஜோஷி, சுபாஷ் பரலா, போஜ்ராஜ் நாக், ரமேஷ் பிதுரி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர். இந்திய ரயில்வேயின் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.
சைக்கிள் பேரணி நிறைவடைந்த பின்னர் பேசிய டாக்டர் மண்டவியா, “ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வில் நமது குடிமக்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு வெகுஜன இயக்கமாக வளர்ந்துள்ளது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வது குறித்து குறிப்பிடத்தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்று, பெருமையுடன் சுதேசி என்ற கருப்பொருளின் கீழ் நான் எம்.பி.க்களுடன் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டேன். அனைத்து குடிமக்களும் பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.
விளையாட்டுப் பொருட்கள் மீதான சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்பு குறித்து டாக்டர் மண்டவியா,, “பெரும்பாலான விளையாட்டுப் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இதன்மூலம் இந்தப் பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும், மேலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் அவர்கள் மிகவும் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கும். இந்திய விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி அலகுகளின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் விளையாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்தும்” என்று கூறினார்.
***
(Release ID: 2164496)
AD/PKV/SG
(Release ID: 2164514)
Visitor Counter : 2