பாதுகாப்பு அமைச்சகம்
கொச்சியில் நடைபெற்ற இந்திய கடலோரக் காவல்படை – அசாம் ரைபிள்ஸ் இடையேயான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நிறைவடைந்தது
Posted On:
27 JUN 2025 5:44PM by PIB Chennai
கொச்சியில் உள்ள கடலோரக் காவல் படையின் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற இந்தியக் கடலோரக் காவல்படை - அசாம் ரைபிள்ஸ் இடையேயான 6-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் இவ்விரு படைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்களது செயல் திறனை மேம்படுத்துவது குறித்தும் சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுடன் கலாச்சாரப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான பணிகள் ஆகிய இரண்டிலும் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு இந்தக் கூட்டம் உத்வேகம் அளிப்பதாக அமைந்திருந்தது.
இவ்விரு படைப்பிரிவுகளின் மூத்த பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதென முடிவு செய்தனர். இதற்கு முன்னர் கடந்த 2019-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஷில்லாங்கில் இந்தக் கூட்டுப்பணிக் குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படைப் பிரிவுகளில் செயல்பாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கும், பல்வேறு படைப்பிரிவுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், பயிற்சி, விளையாட்டு, சாகச நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் இந்தக் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் வகை செய்கிறது.
***
(Release ID: 2140211)
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2140249)