பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலக அரிவாள் செல் தினம் கடைப்பிடிப்பு
Posted On:
19 JUN 2025 5:23PM by PIB Chennai
நாட்டிலிருந்து அரிவாள் செல் நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு துர்காதாஸ் யுகே தெரிவித்துள்ளார். "உலக அரிவாள் செல் தினத்தை" முன்னிட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரிவாள் செல் என்ற ரத்த சோகை நோயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். நாட்டிலிருந்து இந்த நோயை முற்றிலும் ஒழிப்பதில் மத்திய அரசு அனைத்து தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் அரிவாள் செல் ரத்த சோகை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2023–ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள், உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த நோயை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, அரிவாள் செல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தில்லியில் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
அரிவாள் செல் என்பது ஒரு மரபணு தொடர்பான நோயாகும். இது நாள்பட்ட ரத்த சோகை, இரத்த நாளங்களின் அடைப்பு, உறுப்புகள் சேதமடைவது, ஆயுட்காலம் கணிசமான அளவில் குறைதல் போன்றவை அடிப்படையில் இந்நோய் வகைப்படுத்தப்படுகிறது. இந்த நோய் குறிப்பாக பழங்குடி மக்களிடையே காணப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137717
***
AD/SMB/SV/KPG/DL
(Release ID: 2137796)