தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 4 வார கோடைக்கால பயிற்சித் திட்டம்

Posted On: 17 JUN 2025 1:58PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நான்கு வார கோடைக்கால பயிற்சித் திட்டத்தை நேற்று (2025 ஜூன் 16) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்தில் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக அளவிலான மாணவர்களிடையே மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும். 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 42 கல்வி நிறுவனங்களில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சட்டம், சமூக அறிவியல், சமூகப் பணி, உளவியல், இதழியல், சர்வதேச உறவுகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர், நீதிபதி திரு வி. ராமசுப்பிரமணியன், அனைவருக்கும் சம உரிமைகளும் சமமான வாய்ப்புகளும் கொண்ட சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், மனித உரிமைகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதுடன், சமூகத்திற்கு அதை எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு பரத் லால், ஆணையத்தின் இணைச் செயலாளர் திரு சமீர் குமார் ஆகியோர் பேசுகையில், இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

***

(Release ID: 2136897)
VL/PLM/RR/KR


(Release ID: 2136951)