கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பீகாரில் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்தும் முக்கிய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அறிவித்தார்
Posted On:
16 JUN 2025 4:27PM by PIB Chennai
பீகாரில் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அறிவித்தார். தேசிய நீர்வழிகள்-1 (கங்கை நதி) மீதான உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாடு குறித்த பயிலரங்கத் தொடக்க அமர்வில் இன்று இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த ஆலோசனை பயிற்சிப் பயிலரங்கிற்கு மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் தலைமை தாங்கினார். இதில் மத்திய ஜவுளி அமைச்சர் திரு. கிரிராஜ் சிங்; பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி; மற்றும் விஜய் குமார் சின்ஹா; பீகார் நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி; பீகார் போக்குவரத்து அமைச்சர் ஷீலா குமாரி; உத்தரபிரதேச போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங்; மேற்கு வங்க அரசின் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மனாஸ் ரஞ்சன் பூனியா; உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிலரங்கில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், நமது கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாக மட்டுமல்லாமல், நமது எதிர்கால வளர்ச்சியின் இயந்திரங்களாக நமது ஆறுகளை மாற்றுவதற்கு, குறிப்பாக தேசிய நீர்வழிகளைப் புத்துயிர் பெறச் செய்யும் கூட்டு முயற்சியை மீண்டும் நாம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். உள்நாட்டு நீர் போக்குவரத்து மிகவும் சுத்தமான, செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கங்கை நதி புத்துயிர் பெறுவதற்கான சூழல் குறித்து பேசிய மத்திய அமைச்சர், "இந்த நிலத்தின் வாழ்க்கை, நாகரிகம் மற்றும் ஆன்மீக சக்தியின் ஆதாரமான புனித கங்கை நதியை தாம் வணங்குவதாக கூறினார். கங்கை நீரில் பல நூற்றாண்டுகளின் கலாச்சாரம், ஞானம், வாழ்வாதாரம் கலந்து உள்ளதாகவும், கங்கை வெறும் நதி அல்ல; இந்திய துணைக்கண்டத்தின் இதயத்துடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று, பாட்னாவில் அதன் அரவணைப்பால் வளர்க்கப்பட்ட ஒரு நகரத்தில் நாம் இந்த புனித நதியை நாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான நவீன பயணத்துடன் இணைக்கும் உறுதிப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பீகாரில் உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய முயற்சியை விவரித்த அவர், "புவியியல் நிலையைப் பொறுத்து, கொச்சி நீர் மெட்ரோ போக்குவரத்து முறையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாட்னாவில் அறிமுகப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழியப்பட்ட அமைப்பு, ஆற்றின் இரு கரைகளையும் இணைத்து, தலைநகருக்கு சுத்தமான, திறமையான மற்றும் நவீன நகர்ப்புற போக்குவரத்து தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஒரு உள்நாட்டு கப்பல் போக்குவரத்து சூழலை உருவாக்க, பாட்னாவில் ஒரு கப்பல் பழுதுபார்க்கும் மையம் அமைக்கப்படும் என்றும் புதிய கப்பல்களைக் கட்டவும் இந்த வசதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கங்கை நதியில் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய பீகார் அரசு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு பணிக்குழு அமைக்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அறிவித்தார்
கங்கை ஆற்றில் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், “பீகார் மக்களுக்கு உள்நாட்டு நீர் போக்குவரத்தை நம்பகமான போக்குவரத்து முறையாக மாற்றுவதற்கும் நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2136674
***
AD/TS/GK/LDN/KR/DL
(Release ID: 2136763)