அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

'புத்தாக்க கண்டுபிடிப்பு நடைமுறைகளில் எளிமை', 'ஆராய்ச்சியில் எளிமை' 'அறிவியல் எளிமை' ஆகியவற்றுக்கான கொள்கை சீர்திருத்தங்களை மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் அறிவித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆதரவு இல்லாமல் இது போன்ற புரட்சிகரமான முடிவுகள் சாத்தியமில்லை - திரு ஜிதேந்திர சிங்

Posted On: 15 JUN 2025 4:10PM by PIB Chennai

இந்தியாவில் ஆராய்ச்சி சூழலை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இன்று (15.06.2025) புதுதில்லியில் அறிவித்தார். "புதுமைக் கண்டுபிடிப்பு நடைமுறைகளில் எளிமை"  "ஆராய்ச்சிகளை எளிதாக்குதல்" "அறிவியல் எளிமை" ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களை அவர் அறிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் ஆகியோருக்கும் நிறுவனங்களுக்கும் பலன்களை வழங்கும்.

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய திரு ஜிதேந்திர சிங், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் அன்றாட செயல்பாட்டில் உள்ள  சில தடைகளைத் தவிர்க்க உதவும் முடிவுகளையும் வெளியிட்டார். குறிப்பாக கொள்முதல் தாமதங்கள், நிதி உச்சவரம்புகள் தொடர்பான தடைகளை நீக்கும் சீர்திருத்தங்களை அவர் அறிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனிப்பட்ட ஈடுபாடும் ஆதரவும் இல்லாமல் இத்தகைய திருப்புமுனை முடிவுகள் சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள 13 ஐஐடி-கள், பல ஆராய்ச்சி அமைப்புகளிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டதாக அவர் கூறினார்.

 நிறுவனத் தலைவர்களுக்கு கொள்முதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அறிவியல் அமைப்புகளின் இயக்குநர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் போன்றவர்கள் இப்போது சிறப்பு ஆராய்ச்சி உபகரணங்களுக்கு அரசு மின்-சந்தை அல்லாத கொள்முதல் வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். 

பொது நிதி விதிகளின் (GFR) கீழ் முக்கிய நிதி வரம்புகளையும் அரசு திருத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேரடி கொள்முதல்களுக்கான உச்சவரம்பு ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது எனவும் அதே நேரத்தில் துறைசார் குழுக்கள் மூலம் வாங்குவதற்கான வரம்பு ₹1 லட்சம் முதல் ₹10 லட்சத்திலிருந்து ₹2 லட்சம் முதல் ₹ 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இதேபோல், வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கான வரம்புகள் ₹50 லட்சத்திலிருந்து ₹1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். நிறுவனத் தலைவர்கள் இப்போது ₹200 கோடி வரையிலான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி விசாரணைகளை அங்கீகரிக்கலாம் எனவும் முன்பு உயர் அதிகாரிகளுக்குத் தான் இந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கொள்கைகள், தாமதங்களை நீக்கி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் நீண்டகால குறைகளைத் தீர்க்கும் என அவர் குறிப்பிட்டார். இந்தச் சீர்திருத்தங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கினாலும், இவை நம்பிக்கை, பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று திரு ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தினார். இந்த நெகிழ்வுத்தன்மை நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அறிவியல் சமூகத்தை அரசு நம்பியுள்ளது என்று அவர் கூறினார்.

உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ். கோகலே, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே. சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளர் சுனில் குமார், மூத்த விஞ்ஞானிகள், சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

*****

(Release ID: 2136460)

AD/TS/PLM/RJ


(Release ID: 2136470)
Read this release in: English , Urdu , Hindi , Marathi