பிரதமர் அலுவலகம்
பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை
Posted On:
07 JUN 2025 2:59PM by PIB Chennai
மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, அன்பான நண்பர்களே, வணக்கம்.
பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த மாநாட்டின் கருப்பொருள் 'கடலோரப் பகுதிகளுக்கு தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குதல்'. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள் பெரும் ஆபத்தில் உள்ளன. சமீபத்திய காலங்களில், நாம் கண்கூடாக கண்டவை: இந்தியா மற்றும் வங்கதேசத்தில் ரெமல் சூறாவளி, கரீபியனில் பெரில் சூறாவளி, தென்கிழக்கு ஆசியாவில் யாகி சூறாவளி, அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளி, பிலிப்பைன்ஸில் உசாகி சூறாவளி மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சிடோ சூறாவளி. இத்தகைய பேரழிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தின.
நண்பர்களே,
1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூப்பர் சூறாவளி மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது இந்தியாவும் இந்த வலியை அனுபவித்தது. மீள்தன்மையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மாற்றியமைத்து மீண்டும் கட்டினோம். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தங்குமிடங்கள் கட்டப்பட்டன. 29 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்கவும் நாங்கள் உதவினோம்.
நண்பர்களே,
பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி 25 வளரும் சிறிய தீவு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. மீள்தன்மை கொண்ட வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், எரிசக்தி, நீர் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு, பசிபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த நண்பர்களை இங்கே பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், ஆப்பிரிக்க ஒன்றியமும் இதில் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
சில முக்கியமான உலகளாவிய முன்னுரிமைகள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
முதலாவதாக: பேரிடர் மீள்தன்மை குறித்த படிப்புகள், தொகுதிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உயர்கல்வியின் ஒரு பகுதியாக மாற வேண்டும். இது எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்கும்.
இரண்டாவது: பல நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்கின்றன மற்றும் மீள்தன்மை கொண்ட மீள்கட்டமைப்புகளை எழுப்புகின்றன. அவர்களின் கற்றல் மற்றும் சிறந்த நடைமுறைகளின் உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அனைவருக்குயம் நன்மை பயக்கும்.
மூன்றாவது: பேரிடர் மீட்சிக்கு புதுமையான நிதி தேவை. நாம் செயல்படக்கூடிய திட்டங்களை வடிவமைத்து, வளரும் நாடுகளுக்கு நிதி அணுகலை உறுதி செய்ய வேண்டும்.
நான்காவது: வளரும் சிறிய தீவு நாடுகளை பெரிய பெருங்கடல் நாடுகளாக நாங்கள் கருதுகிறோம். அவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக, அவை சிறப்பு கவனம் பெற வேண்டியவை.
ஐந்தாவது: முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது மிக முக்கியம். இது சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதற்கும், கடைசி மைல் வரை பயனுள்ள தகவல்தொடர்புக்கும் உதவுகிறது. இந்த மாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
காலம் மற்றும் அலைகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவோம். உலகிற்கு வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவோம்.
நன்றி.
***
(Release ID: 2134799)
AD/TS/PKV/DL
(Release ID: 2134826)