உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற பீகார் மாநில மக்களின் நீண்டகால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது: பிரதமர் திரு. நரேந்திர மோடி
Posted On:
30 MAY 2025 3:28PM by PIB Chennai
பீகார் மாநிலத்தில் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பண்டையக் கால நகரமும் அம்மாநிலத் தலைநகருமான பாட்னா அதிநவீன விமான நிலைய முனையத்தை தற்போது பெற்றுள்ளது. இந்த முனையம் ரூ.1,200 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 65,150 சதுர மீட்டருக்கும் கூடுதல் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், உச்சகட்ட போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் 3,000 பயணிகளையும், ஆண்டுதோறும் ஒரு கோடி பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிஹ்தாவில் கட்டப்படவுள்ள சிவில் என்கிளேவ் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 64 பயணியர் பரிசோதனை முகப்புகள், ஒன்பது தானியங்கி உடைமைகள் மீட்பு அமைப்புகள், ஐந்து உயர்நிலைப் பாலங்கள் மற்றும் 1,100 கார்களுக்கான பலஅடுக்கு வாகன நிறுத்துமிட வசதி ஆகியவற்றைக் கொண்ட இந்த முனையம், பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.
பிரதமருடன் பீகார் மாநில ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு, அத்துறைக்கான இணையமைச்சர் திரு. முரளிதர் மொஹோல், அம்மாநில துணை முதல்வர்கள் திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் ஸ்ரீ விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் ஒரு காலத்தில் பாட்னாவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே இருந்தது. அம்மாநிலத்தில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, "தர்பங்கா விமான நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்றும், டெல்லி, மும்பை,பெங்களூரு போன்ற நகரங்களுக்கு நேரடி விமானப் போக்குவரத்து சேவைகள் நடைபெற்று வருவதாகவும்" கூறினார். பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற அம்மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். நேற்று மாலை, பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது என்று அவர் கூறினார். இது தற்போது ஒரு கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய முனையம் பீகார் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாலந்தா மகாவிஹாராவில் உள்ள மிதிலா கலையம்சம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பசுமை எரிசக்தி அம்சங்களை உள்ளடக்கிய வகையில் எல்இடி விளக்குகள், வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை உள்ளிட்ட 4 நட்சத்திர க்ரிஹ மதிப்பீட்டை இலக்காகக் கொண்டு நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132684
******
(Release ID: 2132684)
AD/TS/SV/SG
(Release ID: 2132742)