தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கிளாசிக்கல் மற்றும் குவாண்டம் தகவல்தொடர்புகளில் கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த, சி-டாட் மற்றும் சிஎஸ்ஐஆர்-என்பிஎல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
Posted On:
07 MAY 2025 6:21PM by PIB Chennai
கிளாசிக்கல் மற்றும் குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (சி-டாட்) மற்றும் சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்பிஎல்) ஆகியவை கூட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டு கட்டமைப்பை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் இந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சி-டாட், சுவிட்சிங் சிஸ்டம்ஸ், வலையமைப்பு நெறிமுறைகள், இணையம் சார்ந்த செயல்பாடுகள், எம்2எம், வயர்லெஸ் மற்றும் குவாண்டம் தகவல்தொடர்புகள் உள்ளிட்ட தொலைத்தொடர்புகளில் புதுமைகளைத் தொடர்ந்து வழிநடத்துகிறது. இந்தியாவின் தேசிய அளவியல் நிறுவனமான சிஎஸ்ஐஆர்-என்பிஎல், தேசிய தரநிலைகளின் பாதுகாவலராக உள்ளது மற்றும் அளவியல், பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் அதிநவீன ஆராய்ச்சியை நடத்துவதில் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, மேம்பாடு, தரப்படுத்தல் மற்றும் விநியோகத்தை ஆதரிப்பதற்கான நீண்டகால கூட்டு கட்டமைப்பை நிறுவுவதாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பேசிய சி-டாட்-இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய், நாட்டின் எதிர்கால டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் குவாண்டம் தகவல்தொடர்புகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். "தரவைப் பாதுகாப்பதிலும் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் குவாண்டம் தகவல்தொடர்பு அடுத்த எல்லையைக் குறிக்கிறது. சிஎஸ்ஐஆர்-என்பிஎல் உடனான இந்தக் கூட்டாண்மை, திறன்களின் உத்தி சார்ந்த சீரமைப்பு மட்டுமல்ல, சுயசார்பு மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையின் தேசிய முன்னுரிமைகளுக்கான உறுதிப்பாடாகும்", என்று கூறினார்.
டாக்டர் உபாத்யாயின் கூற்றை எதிரொலிக்கும் வகையில், நாட்டில் தரமான உள்கட்டமைப்பை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-இன் இயக்குநர் பேராசிரியர் வேணுகோபால் அச்சந்தா வலியுறுத்தினார். இது "மேக் இன் இந்தியா" மற்றும் "தற்சார்பு இந்தியா" போன்ற அரசின் முயற்சிகளை அதிகரிக்கும், என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127568
***
RB/DL
(Release ID: 2127568)
(Release ID: 2127613)