புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கடன் அனுமதி 27 சதவீதம் அதிகரித்து ₹47,453 கோடியாக உயர்ந்துள்ளது
Posted On:
31 MAR 2025 6:44PM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA-ஐஆர்இடிஏ) நிறுவனத்தின் தற்காலிக தரவுகளின்படி, இன்றைய நிலவரப்படி (2025 மார்ச் 31) இந்த நிதியாண்டில் அதன் கடன் வழங்குதல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2024-25-ம் நிதியாண்டிற்கான கடன் ஒப்புதல்கள் ₹47,453 கோடியாக உள்ளன. இது முந்தைய ஆண்டில் ₹37,354 கோடியிலிருந்து 27% அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் ₹25,089 கோடியாக இருந்த கடன் வழங்கல் 20% அதிகரித்து ₹30,168 கோடியாக அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள மொத்த நிகர கடன் தொகை 28 சதவீதம் விரிவடைந்து, 2025 மார்ச் 31 நிலவரப்படி ₹76,250 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் ₹59,698 கோடியாக இருந்தது.
ஐஆர்இடிஏ-வின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான திரு பிரதீப் குமார் தாஸ் கூறியதாவது:
"நிதியாண்டின் கடைசி நாளில் ஐஆர்இடிஏ-வின் வருடாந்திர செயல்திறனை அறிவிப்பது, பெருநிறுவன ஆளுகையில் சிறந்த தன்மையையும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் வலுவான உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது. கடன் ஒப்புதல்கள், பட்டுவாடா, மொத்த நிகர கடன் தொகையில் ஐஆர்இடிஏ-வின் நிலையான வளர்ச்சி ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் எங்கள் வலுவான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், இணையமைச்சர், செயலாளர், எங்கள் இயக்குநர்கள் குழு; கட்டுப்பாட்டாளர்கள், பிற அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆகியோரின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஐஆர்இடிஏ குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்."
இவ்வாறு திரு பிரதீப் குமார் தாஸ் கூறினார்.
***
TS/PLM/KV
(Release ID: 2117065)