கலாசாரத்துறை அமைச்சகம்
துவாரகாவில் நீருக்கடியில் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2025 4:11PM by PIB Chennai
துவாரகா மற்றும் பெட் துவாரகா கடற்பகுதியில், நீருக்கடியில் தொல்பொருள் ஆய்வு நடந்து வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர நீரில் மூழ்கிய தொல்பொருள் எச்சங்களைத் தேடுவது, ஆவணப்படுத்துவது ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும். ஆய்வின்போது கிடைக்கும் வண்டல் படிவுகள், தொல்பொருள் மற்றும் கடல் படிவுகளை அறிவியல் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மீட்கப்பட்ட பொருட்களின் பழமையை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
நீருக்கடியில் தொல்லியல் பிரிவு உட்பட இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் கள அலுவலகங்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் களப்பணிக்காக பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை மூலம் களப்பணி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடப்பு களப்பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப தொலையுணர்வு கருவிகள் உள்ளிட்ட நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி முறையான தொல்லியல் ஆய்வு மற்றும் ஆய்வுகளை நீருக்கடியில் ஆய்வு நடத்தும் பிரிவு மேற்கொள்கிறது. நீரில் முக்குளித்து தேடுதல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான நவீன தொழில்நுட்பமும் தற்போதைய களப்பணியில் பயன்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/SG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2115872)
வருகையாளர் எண்ணிக்கை : 56