வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவும் நியூசிலாந்தும் விரிவான, இருதரப்பிற்கும் பயன் தரக் கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க பணியாற்றி வருகின்றன: திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2025 5:41PM by PIB Chennai
இந்தியாவும், நியூசிலாந்தும் விரிவான, இருதரப்பிற்கும் பயன் தரக் கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. புதுதில்லியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்தின் தலைமை செயல் அதிகாரிகளிடையே உரையாற்றிய மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளும் இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அறிவித்தன. இன்றைய நிகழ்வில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சன், நியூசிலாந்தின் வர்த்தகம், முதலீடு, வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சர் திரு டோட் மெக்லே, வர்த்தகத் தலைவர்கள் மற்றும் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வர்த்தகத் தலைவர்களிடையே உரையாற்றிய திரு கோயல், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். அடுத்த பத்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தில் 10 மடங்கு வளர்ச்சியை இலக்காகக் கொண்ட இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மைக்கான இலட்சியத் தொலைநோக்கை அவர் வெளிப்படுத்தினார்.
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சன் உரையாற்றிய போது, இரு நாட்டு பொருளாதாரங்களிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் வணிகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று கூறினார். நியூசிலாந்து ஈடுபட உள்ள புதிய எல்லைகள் மற்றும் துறைகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார். தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 3 பில்லியன் டாலர் அளவிற்கு உள்ள நிலையில், இங்கே தங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த இலக்கை அடைய இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள் பங்களிக்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
***
TS/IR/RR/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2112418)
வருகையாளர் எண்ணிக்கை : 57