பாதுகாப்பு அமைச்சகம்
'புதுமையே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை' என்ற தலைப்பில் கருத்தரங்கு - ஏரோ இந்தியா கண்காட்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 11 அன்று விமானப்படை நடத்துகிறது
Posted On:
09 FEB 2025 3:50PM by PIB Chennai
தற்சார்பை அடைய அரசு கொள்கைகள் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையின் திறனைப் பயன்படுத்தும் நோக்கில் விமானப்படை (IAF) செயல்பட்டு வருகிறது. உதிரி பாகங்கள், உபகரணங்களின் நிலைத்தன்மையை புதுமைப்படுத்துவதில் கணிசமான வெற்றி எட்டப்பட்டுள்ளது. சிக்கலான எதிர்கால தொழில்நுட்பங்கள், ஆயுத அமைப்புகள், விண்வெளி களம் ஆகியவற்றை நோக்கி இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.
ஏரோ இந்தியா என்பது முதன்மையான விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றாகும். இது விமானத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய தளமாக உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு தீவிரமாக ஆதரவளிப்பதன் மூலம் 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்பும் திட்டத்தின் தொலைநோக்கை ஏற்று செயல்படுவதில் இந்திய விமானப்படை முன்னணியில் உள்ளது.
எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தற்சார்பை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தவும், இந்திய விமானப்படை "நவசார் உத்கிரிஷ்டம் பவிஸ்யம்", அதாவது, புதுமையே சிறந்த எதிர்காலத்திற்கான பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். விமானப் படைத் தளபதி இதில் கலந்து கொள்கிறார்.
இந்தக் கருத்தரங்கு 2025 பிப்ரவரி 11 அன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள், விமானப் போக்குவரத்து, விண்வெளித் துறையைச் சேர்ந்த தொழில்துறைத் பிரதிநிதிகள், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் நிறுவனத்தினர், முத்தொழில் நிறுவனத்தினர், கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள்.
பாதுகாப்புப் படைகளுக்கும், தொழில்துறையினருக்கும், ஆராய்ச்சி - மேம்பாட்டு முகமைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, புதிய கண்டுபிடிப்புகளுக்கான வலுவான சூழல் அமைப்பை வளர்ப்பது ஆகியவை இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும்.
***
PLM/KV
(Release ID: 2101158)