குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தேசிய சிறுதொழில் கழகம் 2023-24-ம் ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ.37.97 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2024 5:26PM by PIB Chennai
தேசிய சிறுதொழில் கழகம் 2023-24 நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக ரூ.37.97 கோடியை மத்திய அரசுக்கு இன்று வழங்கியது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுப்ரான்சு சேகர் ஆச்சார்யா, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, துறையின் இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே ஆகியோரிடம் ஈவுத்தொகைக்கான காசோலையை வழங்கினார். இது தேசிய சிறுதொழில் கழகம் இதுவரை வழங்கிய அதிகபட்ச ஈவுத்தொகையாகும். இக்கழகத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 3,273 கோடியாக இருந்தது. இது 18.16% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.126.56 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.55% அதிகமாகும்,
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜிதன் ராம் மஞ்சி, தேசிய சிறுதொழில் கழகம் நாடு முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் திரு எஸ். சி. எல் தாஸ் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
----
SMB/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2080881)
வருகையாளர் எண்ணிக்கை : 55