சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பர்யாதன் மித்ரா, பர்யாதன் தீதி

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2024 5:31PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் பர்யாதன் மித்ரா,  பர்யாதன் தீதி என்ற பெயர்களில் தேசிய அளவிலான பொறுப்புணர்வு மிக்க சுற்றுலா முயற்சியைத் தொடங்கியது. ஓர்ச்சா (மத்திய பிரதேசம்), கண்டிகோட்டா (ஆந்திரா), புத்த கயா (பீகார்), அய்ஸ்வால் (மிசோரம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்), ஸ்ரீ விஜயபுரம் (அந்தமான் - நிக்கோபார் தீவுகள்) ஆகிய 6 சுற்றுலா தலங்களில் இந்த சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம், சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாத் தலங்களில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழிகாட்டுவது தொடர்பான பயிற்சியும் விழிப்புணர்வும் இதில் வழங்கப்படுகிறது.

வாடகை வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள், உணவக தொழிலாளர்கள், தங்குமிட உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், காவல்துறையினர், சாலையோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு சுற்றுலாவின் முக்கியத்துவம், பொது தூய்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, சுற்றுலாப் பயணிகளுக்கு மிக உயர்ந்த தரமான விருந்தோம்பலை வழங்குவதன் முக்கியத்துவம் போன்றவை குறித்து பயிற்சியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த திட்டம் முன்னோட்டமாக தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த முயற்சியின் கீழ் 3,500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

உலக சுற்றுலா தினத்தன்று, சுற்றுலா அமைச்சகம் நாட்டின் 50 சுற்றுலா தலங்களில் பரியாதன் மித்ரா, பர்யாதன் தீதியை விரிவுபடுத்தியது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

-----

PLM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2079880) வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi