நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: திரு பிரலாத் ஜோஷி
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2024 3:17PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக தர நிர்ணய தினத்தையொட்டி, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி சிறப்புரையாற்றியபோது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை இந்திய தர நிர்ணய அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். நுகர்வோரின் நல்வாழ்வு தரமான தயாரிப்புகளுக்கான அணுகலைப் பொறுத்தது, அதே நேரத்தில் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் லாபம் இந்த உயர்தர பொருட்களுக்கான தேவையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் பரஸ்பர சார்பை ஒப்புக்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறையாகும், இது வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கிறது என்று அவர் கூறினார்.
நாடு அதன் சிறந்த தரத்திற்காக அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் உலகத் தரத்திற்கு ஒத்ததாக இந்தியா தன்னை மாற்றிக் கொள்ள பாடுபட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை திரு ஜோஷி வலியுறுத்தினார். உலகளாவிய வர்த்தகத்தில் அதன் பங்களிப்புடன் இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதால் இந்திய தர நிர்ணய அமைப்பு தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சியை வளப்படுத்துவதிலும், 'மேட் இன் இந்தியா' முத்திரையை மேம்படுத்துவதிலும், உலக அளவில் பாரத் சூழலை உருவாக்குவதிலும் இந்திய தர நிர்ணய அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், 2016-ம் ஆண்டின் புதிய இந்திய தர நிர்ணய அமைப்புச் சட்டம் எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும் வலுப்படுத்தும் என்றும். 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க தரநிலைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவது அவசியம் என்று மத்திய அமைச்சர் கூறினார். பிஐஎஸ் மேற்கொண்டு வரும் தரநிலைத் திட்டங்கள் குறித்து குடிமக்களிடையே பரவலான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அரசுக்கு சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு ஐஎஸ்ஐ மற்றும் பிஐஎஸ் சான்றிதழை சரிபார்க்க நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தரத்தை நாம் அமைக்க வேண்டும், அதுதான் சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.
தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, சமூகத்தின் முதுகெலும்பாக செயல்படுவதால், தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தயாரிப்பு மற்றும் சேவையில் பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு ஜோஷி கூறினார்.
***
IR/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2064727)
வருகையாளர் எண்ணிக்கை : 87