நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
புதிய அரசின் முதல் 100 நாட்களில், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு எடுத்துரைத்தார்
Posted On:
25 SEP 2024 3:11PM by PIB Chennai
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் பற்றி இத்துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இன்று புதுதில்லியில் உள்ள சி.ஜி.ஓ வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் சாதனைகளை எடுத்துரைத்த போது கீழ்க்கண்ட முன்முயற்சிகள் பற்றி அமைச்சர் கூறினார்:-
தேசிய இ-விதான் செயலி – நேவா 2.0
நேவா செல்பேசி செயலி பதிப்பு 2.0
தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் போர்டல் 2.0
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்ற போட்டி
சார்நிலைச் சட்ட நிர்வாக முறைமை
ஆலோசனைக் குழுக்கள் நிர்வாக முறைமை
'மாநில டிஜிட்டல் சட்டமன்றங்களுக்கான' தேசிய இ-விதான் செயலி (நேவா) 2.0 போர்டல்
அனைத்து மாநில சட்டமன்றங்களையும் 'டிஜிட்டல் மன்றம்' ஆக மாற்றுவதற்கு, டிஜிட்டல் சட்டமன்றங்களுக்கான 'ஒரு தேசம் - ஒரு செயலி' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இயக்க ரீதியிலான நேவா, 2020 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சட்டமன்றங்கள் தங்கள் முழு பணிகளையும் டிஜிட்டல் தளத்தில் காகிதமில்லா முறையில் பரிவர்த்தனை செய்ய முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த இதுவரை 25 மாநில சட்டமன்றங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 22 சட்டமன்றங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 அவைகளில் ஏற்கெனவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நேவா தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் இந்தத் திட்டத்தில் பல புதிய முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாஷினி ஏபிஐ-யைப் பயன்படுத்தி 13 மொழிகளில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது, உறுப்பினர் இடைமுகத்தை மாற்றியமைத்தல், புதிய வடிவமைப்பு, போன்றவை இவற்றில் அடங்கும். அசாம் சட்டமன்றம் 12 ஆகஸ்ட், 2024 அன்று நேவா-வில் இணைந்துள்ளது. இதை அசாம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு புதிய மாநிலங்களுக்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0
ஜனநாயகத்தின் வேர்களைப் பலப்படுத்துதல், ஒழுக்கத்தில் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்தல், மாறுபட்ட கருத்துகளில் சகிப்புத்தன்மையை மேம்படுத்துதல், நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 1966 முதல் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இளையோர் நாடாளுமன்ற போட்டிகளை அமைச்சகம் நடத்தி வருகிறது. இது தில்லி பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களை உள்ளடக்கியது.
மக்களை சென்றடைவதை மேம்படுத்த, முற்றிலும் டிஜிட்டல் முன்முயற்சியான தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் போர்ட்டலை குடியரசுத்தலைவர் 2019, நவம்பர் 26 அன்று தொடங்கி வைத்தார். இதில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்று சான்றிதழ் பெறலாம். இப்போது புதுப்பிக்கப்பட்ட தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0 போர்ட்டல் 2024, 11 செப்டம்பர் அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், குழுக்கள் / தனிநபர்களும் திட்டத்தில் பங்கேற்று சான்றிதழ் பெறலாம். இதில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளும் தற்போது இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மையே சேவை இயக்கம் 2024-ன் கீழ், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, தூய்மை இந்தியா என்ற நோக்கத்தை அடைய 2024 செப்டம்பர் 23 அன்று தூய்மைக்கான உழைப்புதானத்துடன் மக்கள் தூய்மை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058580
***
SMB/RS/KR/DL
(Release ID: 2058682)