பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஓய்வூதிய முகாம் மூலம் 70% அதிகமான ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2024 5:11PM by PIB Chennai
2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஓய்வூதிய முகாம் மூலம் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்காலத்தில், 10 ஓய்வூதிய முகாம்கள் நடத்தப்பட்டு, 24,926 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், 1,7760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறினார். தாமதமான ஓய்வூதிய வழக்குகள் மற்றும் குடும்ப ஓய்வூதிய வழக்குகள் குறித்த ஓய்வூதிய முகாம் 2023-2024-ம் ஆண்டில் நடத்தப்பட்டதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
வேலைவாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளிப்பதை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிய நடவடிக்கை என்று அவர் கூறினார்.
2022, அக்டோபர் 22 அன்று பிரதமர் திரு மோடி தொடங்கிய வேலைவாய்ப்பு திருவிழாவில் ஒரு பகுதியாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சகங்கள், துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாகவோ அல்லது குறிப்பிட்ட பணியாளர் சேர்ப்பு முகமைகள் மூலமாகவோ பணி நியமனம் செய்யப்படுகிறது என்று டாக்டர் சிங் மேலும் கூறினார்.
***
IR/RS/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2040409)
வருகையாளர் எண்ணிக்கை : 114